தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 10, 2023, 12:15 PM IST

ETV Bharat / state

மணிப்பூரில் சிக்கித்தவித்த தமிழ்நாட்டு மாணவர்கள் சென்னை வருகை

மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

மணிப்பூரில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் சென்னை வருகை
மணிப்பூரில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் சென்னை வருகை

மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்த தமிழ்நாட்டின் மாணவர்கள் அளித்த பேட்டி

சென்னை:கடந்த சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி என்ற இனக்குழுவை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு மணிப்பூரில் வாழும் பிற இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதேநேரம், பழங்குடியினர் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா மற்றும் குக்கி இன மக்கள் மைத்தேயி மக்களுக்கு எதிராக வன்முறை மிகுந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது வரை நடந்த மோதல்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.

இதனிடையே, மணிப்பூரில் சிக்கி உள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், மணிப்பூரின் மோரே நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். ஆனால், கலவரக்காரர்களால் அவர்களது வீடுகளும், கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன.

இதன் காரணமாக மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மைத்தேயி இனக்குழுவினரும் சொந்த நிலத்தை விட்டு அகதிகளைப் போல வெளியேறி வருகின்றனர். மேலும், வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், மணிப்பூரில் இருந்து பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர். அதன் அடிப்படையில், தமிழ்நாட்டின் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ், கோவில்பட்டியைச் சேர்ந்த முருகலெட்சுமி, பூந்தமல்லியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் போரூரைச் சேர்ந்த விசால் சீனிவாசன் ஆகிய மாணவர்கள் முதல்கட்டமாக அயலக தமிழர் நலத்துறையின் முயற்சியில் சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.

பின்னர், அவர்கள் அங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மாணவர்கள், “கல்லூரி மற்றும் வசித்து வரும் வீட்டு வாசலில் குண்டு வெடிப்பு நடந்தது. அங்கு (மணிப்பூர்) தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. உணவு, தண்ணீர் இன்றி தவித்த நிலையில் தமிழ்நாடு அரசின் உதவி உடன் மீண்டு, தமிழ்நாட்டுக்கு வந்தது மகிழ்ச்சிகரமாக உள்ளது” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:Manipur Violence: மணிப்பூரில் இருதரப்பு மோதல்.. கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு.. ராணுவம் வெளியிட்ட அப்டேட்!

ABOUT THE AUTHOR

...view details