தமிழ்நாடு

tamil nadu

காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதல்கள் வழங்க 'தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ அமைப்பு

By

Published : Oct 23, 2022, 8:08 AM IST

காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குவதற்காக 'தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு' அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்க 'தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ அமைப்பு
காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்க 'தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு’ அமைப்பு

சென்னை:தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதல்களை வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை கணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு திருப்புமுனை முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இம்முயற்சி பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஒப்புதலுடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது.

இக்குழுவில், பல்வேறு முக்கிய துறைகளின் அனுபவமிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுநர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிர்வாகக் குழுவானது முதலமைச்சர் ஸ்டாலினின் தலைமையில் செயல்படும்.

பொருளாதார நிபுணரான மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம்,

நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு. ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாக குழுவின் சிறப்பு உறுப்பினர்களாக நியமித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர், அரசு துறைகளான தொழில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகியவற்றின் மூத்த அரசு செயலாளர்கள் இந்நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவர்.

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், இந்நிர்வாகக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். இந்நிர்வாகக் குழுவானது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்ப கூடும். இந்நிர்வாகக் குழு தனது குறிக்கோள்களை எட்டுவதற்கான செயல்முறைகளை, தானே வகுத்துக்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க முடிவு

ABOUT THE AUTHOR

...view details