தமிழ்நாடு

tamil nadu

தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்கள் வழங்கல்!

By

Published : Mar 28, 2023, 8:26 PM IST

அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தொழிற்பேட்டைகளில் மனை ஒதுக்கீடு பெற்ற தொழில் முனைவோர்களுக்கு பட்டாக்களையும் வழங்கினார்.

tamil
மாவட்ட

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 28) சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அளவொப்புமை ஆய்வகங்களுக்கான அங்கீகாரத்துடன் (NABL) செயல்பட்டு வரும் காக்களூர் மத்திய மின்பொருள் சோதனைக்கூடத்தில் 1.32 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனை வசதிகளை திறந்து வைத்தார். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் மின் உற்பத்தி பொருட்களின் தரத்தினை இச்சோதனை வசதிகள் வாயிலாக சோதனைக்கு உட்படுத்தி, தரத்தினை மேம்படுத்தி, தரக்குறியீடுகள் பெற வழிவகை செய்யலாம்.

தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளின் இணையம் லிமிடெட் (இண்ட்கோசர்வ்) சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டம், குன்னூர் இண்ட்கோசர்வ் நிறுவனத்தில் 3.29 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஊட்டி டீ -யின் அதிநவீன கலவை மற்றும் சிப்பம் கட்டும் அலகினை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன் மூலம் உற்பத்தி செலவு குறைந்து, இண்ட்கோசர்வ் ஆண்டிற்கு 47.52 லட்சம் ரூபாய் சேமிக்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம் ராணிப்பேட்டை தொழிற்பேட்டையில் 1.35 கோடி ரூபாய் செலவில் 4,825 சதுர அடி பரப்பளவில் தொழிற்பேட்டையைச் சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்கு அறை, மருந்தகம், நிர்வாக அலுவலகம், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பொதுவசதி மையக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயில் தொழிற்பேட்டையில் 750க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்கும் நோக்கத்துடனும் 2.93 கோடி ரூபாய் செலவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையக் கட்டடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மொத்தம் 15 கோடி ரூபாய் செலவில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

நெடுங்காலமாக தொழிற்பேட்டைகளில் பட்டா பெற காத்திருந்த ஒதுக்கீட்டாளர்களுக்கு சிறப்பு முன்னெடுப்பு மூலம் பட்டா வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக 210 மனைதாரர்களுக்கு பட்டா வழங்குவதை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதில் 5 பேருக்கு பட்டா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு பலன்களுக்காக ரூ.1,032 கோடி வழங்கல்!

ABOUT THE AUTHOR

...view details