தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 9:32 AM IST

ETV Bharat / state

'குறைவான கரோனா பரிசோதனை விபரீதத்தை ஏற்படுத்தும்'

சென்னை: கரோனா பெருந்தொற்று குறைந்துவருவதாக வெளி உலகத்திற்குக் காட்ட பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை விளைவிக்கும் எனத் திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கைவிடுத்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ”பூனை கண்ணை மூடிக்கொண்டால், பூலோகம் இருண்டு போகுமோ? - என்றொரு சொலவடை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசும் அப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது.

கரோனா பரிசோதனைகளைக் குறைத்துக் கொள்வதன் மூலமாக, நோய்த்தொற்று குறைந்துவருகிறது அல்லது நோய்த்தொற்றே இல்லை என்று போலியாக வெளி உலகத்திற்குக் காட்ட நினைக்கிறது அரசு.

மே 7ஆம் தேதி 14 ஆயிரத்து 102 என்ற அளவில் இருந்த பரிசோதனைகளின் அளவானது, படிப்படியாகக் குறைக்கப்பட்டு நேற்றைய தகவலின்படி, 8 ஆயிரத்து 270 எனக் குறைந்துள்ளது.

பரிசோதனைசெய்யும் அளவை அரசு கிட்டத்தட்ட 40 விழுக்காடு குறைத்துள்ளது. அதனால் கரோனா பெருந்தொற்று எண்ணிக்கையும் குறைந்துவருவதாகக் காட்டுகிறார்கள்.

பரிசோதனைகளைப் பரவலாக அதிகப்படுத்திய பிறகும், பெருந்தொற்று இல்லை என்று நிரூபிப்பதுதான் நேர்மையான அரசாங்கத்தின் நெறியாக இருக்க முடியுமே தவிர; பரிசோதனையே செய்யாமல் நோயே இல்லை என்று காட்ட முயற்சிசெய்வது, விபரீதத்தையே விளைவிக்கும்.

இது சாதனை அல்ல; வேதனை. கரோனா பெருந்தொற்றுப் பரவல் குறித்த அச்சம் சிறிதும் குறையாத ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் எதற்கு என்று பொதுமக்களும், குறிப்பாகப் பெண்களும் ‘வாட்ஸ்அப்' மூலமாக அனுப்பிவைக்கும் காணொலி பதிவுகளைப் பார்த்த பிறகும் முதலமைச்சருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவில்லை.

டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்காக, மற்ற அனைத்துக் கடைகளையும் திறந்துவிட்டார்கள். இதோ கரோனாவே இல்லை என்ற தோற்றத்தை சில நாள்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காகத்தான் நாள்தோறும் செய்யப்பட்டுவந்த பரிசோதனைகளையும் குறைத்துவிட்டார்கள்.

பரிசோதனைகளை அதிகமாக நடத்தியதால்தான் பெருந்தொற்று உறுதியானவர் எண்ணிக்கையும் அதிகமாகத் தெரியவந்தது. கடந்த சில நாள்களாகப் பரிசோதனையைக் குறைத்து, கரோனா உறுதியானவர் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள்

மேலும் பரிசோதனை செய்வதற்கான ஆர்டி-பி.சி.ஆர். உபகரணங்கள் போதுமான அளவு இல்லையா? துரித பரிசோதனைக் கருவிகளான ரேபிட் கிட்டுகள் இல்லையா? அல்லது கருவிகள் அனைத்தும் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கெடுபிடி செய்துகொண்டு இருக்கிறார்களா? பரிசோதனைகள் செய்யாமல் கரோனா பரவல் இல்லை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது, விளக்கைப் பிடித்துக்கொண்டு ஆழமான கிணற்றில் இறங்குவதைப் போன்றது.

ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும் என்று மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: Cyclone Amphan: ஆறு மணிநேரத்தில் அதிதீவிரமாக மாறும் ஆம்பன் புயல்!

ABOUT THE AUTHOR

...view details