தமிழ்நாடு

tamil nadu

சென்னை விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..? - அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!

By

Published : Apr 11, 2023, 1:02 PM IST

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் தேதி திறந்து வைத்த சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

chennai
சென்னை புதிய ஒருங்கிணைந்த முனையம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அதிநவீன ஒருங்கிணைந்த விமான நிலையம் ரூ.2400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இப்பணிகள், ஃபேஸ் 1, ஃபேஸ் 2 என்று இரு கட்டங்களாக நடத்த முடிவு செய்தனர். ஃபேஸ் 1-ல், ரூ.1260 கோடியில் 1.26 லட்சம் சதுர மீட்டரில், அதிநவீன வசதிகளுடன் சர்வதேச விமான முனையம் கட்டும் பணி கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து வந்தது.

ஆனால் 3 ஆண்டுகளில் முடிய வேண்டிய இந்த பணி, கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக, தாமதமாக நடந்துவந்தது. இந்த நிலையில் சென்னை சர்வதேச புதிய முனையம் அடங்கிய ஃபேஸ் 1 பணிகள் நிறைவடைந்து, கடந்த 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வந்து புதிய விமான முனையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த புதிய முனையத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே உள்ள சென்னை சர்வதேச விமான நிலைய புறப்பாடு முனையத்தில் குடியுரிமை சோதனைக்கு 22 கவுன்டர்களும், வருகை பகுதியில் 34 கவுன்டர்களும் என மொத்தம் 54 கவுன்டர்கள் மட்டுமே உள்ளன. ஆனால் இந்த புதிய அதிநவீன முனையத்தில், வருகை பகுதியில் 54 கவுன்டர்களும், புறப்பாடு பகுதியில் 54 கவுன்டர்களும் மொத்தம் 108 குடியுரிமை கவுன்டர்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பயணிகள் பாதுகாப்பு சோதனைக்காக, ஏற்கனவே 34 கவுன்டர்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. இந்த புதிய முனையத்தில் 80 கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச முனையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம், இனிமேல் இருக்காது. அது தவிர இட நெருக்கடிகள் இல்லாமல் விசாலமான இடங்கள், பயணிகளுக்கு காத்திருக்கும் போது அதிநவீன சாய்வு தளத்துடன் கூடிய இருக்கைகள் என ஏராளமான புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் கண்களை கவரும் விதத்தில் அதிநவீன வண்ணங்களுடன் கூடிய ஓவியங்கள், ஒளிரும் விளக்குகள், இயற்கையாக சூரிய ஒளி விமானநிலையத்தின் உள்பகுதிக்குள் வருவது போன்ற அமைப்புகளுடன், நட்சத்திர ஹோட்டல்கள் போல் விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளும் ஜொலிக்கின்றன.

மேலும் பயணிகளின் உடைமைகளை பரிசோதிப்பதற்காக "இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம்" என்ற 3 அதிநவீன இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் பயணிகளின் உடைமைகளை வேகமாக பரிசோதித்து விமானங்களுக்கு அனுப்பும் தன்மையுடையது. அதோடு இந்த பரிசோதனையின் போது பயணிகள், அவர்களின் லக்கேஜ்கள் கூட வரவேண்டிய அவசியம் இல்லை.

ஏனெனில் பயணிகள் காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்து கொண்டு, தங்களுடைய உடமைகள் பரிசோதிக்கப்படுவதை, எல்சிடி ஸ்க்ரீன் மூலம் பார்த்துக் கொள்ளலாம். பிரச்னைகள் எதுவும் இல்லாத உடைமைகள் நேரடியாக விமானத்திற்கு சென்று விடும். சந்தேகத்துக்குரிய உடமைகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணியை அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

மேலும் "இன் லைன் பேக்கேஜ் சிஸ்டம்" மூலம் பயணிகள் உடைமைகள் பரிசோதிக்கப்படுவதால், மிகவும் துல்லியமான ரிசல்ட் கிடைக்கும். அபாயகரமான ஆயுதங்கள், தடை செய்யப்பட்ட பொருட்கள், போதைப் பொருட்கள் இருந்தால், உடனடியாக காட்டி கொடுத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை புதிய ஒருங்கிணைந்த அதிநவீன முனையம் திறப்பு விழா முறைப்படி நடந்து விட்டாலும், இன்னும் பயணிகள் பயன்பாட்டிற்கு வரவில்லை.

ஐந்து தளங்களுடன் கூடிய இந்த அதிநவீன சர்வதேச விமானம் முனையத்தில், இன்னும் பல்வேறு நவீன கருவிகள் பொருத்தும் பணி மற்றும் உள்கட்டமைப்பு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்து, இந்த புதிய முனையம், பயணிகளின் பயன்பாட்டுக்கு வருவதற்கு மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த அதிநவீன சர்வதேச முனையம் செயல்பாட்டிற்கு வந்ததும், இப்போது பயன்பாட்டில் இருக்கும் சர்வதேச முனையத்தின் வருகை பகுதி, அதை சார்ந்த கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்படும். அதன் பின்பு சென்னை ஒருங்கிணைந்த விமான நிலையத்தின், ஃபேஸ் 2 கட்டடப் பணி தொடங்கும். பேஸ் 2 கட்டடப் பணி தொடங்கி நிறைவடைந்த பின்பு, சென்னை விமான நிலையம், முழு ஒருங்கிணைந்த விமான நிலையமாக செயல்படும்.

அதைத் தொடர்ந்து சர்வதேச முனையம், உள்நாட்டு முனையம் என்று தனித்தனியாக இல்லாமல், பயணிகள் எந்த முனையத்துக்குள்ளும் சென்று போர்டிங் பாஸ் வாங்கிவிட்டு, அவர்கள் பயணிக்க வேண்டிய விமானங்களில் சென்று சுலபமாக பயணிக்கலாம். ஆனால் அதற்கு பயணிகள் மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: VIRAL VIDEO: "போலாம் ரைட்"...! பேருந்திற்கு வழிவிட்டு விலகி நின்ற காட்டுயானை...

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details