தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு நேரடியாக கற்றல் பணிகள் நடைபெறாமல், ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.
ஆனால் அதே நேரத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாட திட்டங்கள் குறைப்பது தொடர்பாக 14 பேர் கொண்ட குழுவை பள்ளிக்கல்வித்துறை அமைத்தது. அந்த குழுவினர் பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தது. மேலும், பள்ளிகள் திறக்கும் சமயத்தில் பாட திட்டங்களை வெளியிடுவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.
கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு முக்கியமான பாட பகுதிகளை மட்டுமே தேர்வு செய்து ஒளி ஒலி வடிவில் கற்பித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வரும் 19ஆம் தேதி முதல் நேரடியாக வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புவரை 50 விழுக்காடு பாட பகுதிகளும், பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 35 விழுக்காடு பாட பகுதிகளும் குறைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஒவ்வொரு பாடத்திலும் குறைக்கப்பட்ட பாட பகுதிகள் எவை என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பாடத்தில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் குறைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித்துறை அறிக்கை தற்போது குறைக்கப்பட்ட பாட பகுதிகள் எவை என்பது வெளியிடப்பட்டுள்ளது . மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கின்ற வகையில் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் தற்போது பாட பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பாட திட்டத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வில் கேள்விகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது