தமிழ்நாடு

tamil nadu

மேவாட் நகரத்தில் பதுங்கிய ஏடிஎம் கொள்ளையர்கள்: கைது செய்வதில் சிக்கல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களின் பணம் எடுக்கும் இயந்திரங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் மேவாட் நகரத்தில் பதுங்கியிருப்பதால், அவர்களைக் கைதுசெய்வதில் தனிப்படையினருக்குச் சிக்கல் எழுந்துள்ளது.

By

Published : Jun 25, 2021, 8:17 AM IST

Published : Jun 25, 2021, 8:17 AM IST

ஏடிஎம் கொள்ளையர்கள்
ஏடிஎம் கொள்ளையர்கள்

சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு வகையான ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. காவல் துறையினரும் அவற்றைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.

சைபர் குற்றங்களின் தலைநகரம்

சைபர் குற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பெரும்பாலும் குற்றவாளிகளைத் தேடிச் செல்லும் இடம் ராஜஸ்தான், ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்கள்தான்.

வங்கி மேலாளர்போல பேசி மோசடி செய்வது, கிரெடிட், டெபிட் கார்டு மோசடி, போலி ஃபேஸ்புக் கணக்கு மூலம் மோசடி எனப் பல்வேறுவிதமான இணைய வழி மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கும், கொள்ளையர்களின் தலைநகரமாக இரண்டு இடங்கள் செயல்படுகின்றன. ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா நகரம்; மற்றொன்று ஹரியானா மாநிலத்தின் மேவாட் மாவட்டம்.

சைபர் குற்றத்திற்கு பயிற்சி

இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் குற்றங்கள் தொடர்புடைய இந்த இரண்டு இடங்களில், மாட்டிக்கொள்ளாமல், ஆன்லைன் மூலமாகக் குற்றங்கள் செய்வதற்கான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அங்கு வேலை கிடைக்காத படித்த இளைஞர்கள், இதுபோன்ற சைபர் குற்றச்செயல்களில் இறங்கியுள்ளனர்.

இந்தக் குற்றவாளிகளைப் பற்றி விசாரிக்கவோ அல்லது கைதுசெய்யவோ, காவல் துறையினர் சாதாரணமாக அந்த ஊர்களுக்குள் நுழைந்துவிட முடியாது. சைபர் குற்றங்களுக்குக் கூடாரமான மேவாட், ஜம்தாராவை சேர்ந்த சைபர் குற்றவாளிகளை, அம்மாவட்ட காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாததால், ஒன்றிய உள் துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு, சைபர் குற்றங்களைக் குறைக்க, ஜார்கண்ட், ஹரியானா காவல் துறையில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸை உருவாக்கி கண்காணித்துவருகின்றது.

மேவாட்டில் பதுங்கிய குற்றவாளிகள்

பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றங்களை அரங்கேற்றிவிட்டு, இந்த ஊர்களில் பதுங்கிக்கொள்வதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் மேவாட் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை சென்னை தனிப்படை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னையில் மட்டும் ஐந்து பிரிவாகப் பிரிந்து கைவரிசை காட்டிய கும்பல், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த பின்னர், மேவாட் மாவட்டத்தில் சென்று பதுங்கிக் கொண்டனர். அதில், அமிர் ஹர்ஸ் என்ற கொள்ளையன் மாவட்டத்திற்குள் நுழையும் முன்பே சென்னை தனிப்படை காவலர்கள் கைதுசெய்துள்ளனர். மற்றவர்களைப் பிடிக்க, ஃபரிதாபாத்தில் முகாமிட்டுள்ளனர்.

ஹரியானா காவல் துறையினரின் உதவி

தனிப்படை காவல் துறையினர் மேவாட் மாவட்டத்திற்குள் நுழைய முடியாமல் இருக்கின்றனர். இதனால் ஹரியானா காவல் துறையின் உதவியுடன் கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சி செய்துவருகின்றனர்.

அந்தப்பகுதி மக்களும், சில காவலர்களும் கொள்ளையர்களுக்கு உதவியாக இருப்பதால், ஊர் தலைவர்கள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திதான் கொள்ளையர்களைக் கைதுசெய்ய முடியும்.

ஏற்கனவே பல வழக்குகளில் குற்றவாளிகளைக் கைதுசெய்ய சென்ற காவல் துறையினர் பல சிரமங்களுக்கு மத்தியில், இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்திதான் குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர்.

புதிய புதிய யுக்திகள்

விசாரணையில் இந்த மேவாட் கொள்ளையர்கள், ஒவ்வொரு முறையும் நூதன முறையில் எவ்வாறு மோசடி செய்வது எனப் புதிய டெக்னிக்குகளை உருவாக்குவார்கள். அதை மேவாட் இளைஞர்களுக்குப் பயிற்சியாக அளிப்பார்கள். அதன்படி நாடு முழுவதும் குறிப்பிட்ட தொகையை கொள்ளையடிக்க டார்கெட் வைப்பார்கள். அந்த டார்கெட்டின்படி கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்த பின்னர் மீண்டும் நூதன முறையில் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் வகுப்பார்கள்.

ஒருமுறை கொள்ளையடிக்கப் பயன்படுத்திய டெக்னிக்கை மீண்டும் சைபர் கொள்ளையர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இந்த மேவாட் கொள்ளையர்கள் 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியில் பட்டதாரிகளாக இருப்பதாகவும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மீதமுள்ள கொள்ளையர்களை பிடிப்பதில் துணை ஆணையர் ஹரிகிரண் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளை வழக்கு: ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details