தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு மதிப்பில்லை - நளினி வழக்கில் மத்திய அரசு!

சென்னை: சட்டவிரோத காவலில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

By

Published : Feb 20, 2020, 5:53 PM IST

நளினி
நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி உட்பட ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

தமிழ்நாடு அரசு பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தன்னை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், "தீர்மானத்தின் மீது ஆளுநர் உத்தரவு பிறப்பிக்காதவரை ,சட்டவிரோத காவலில் உள்ளதாக கருத முடியாது.

அமைச்சரவை பரிந்துரை மீது ஆளுநர் தான் முடிவெடுக்க முடியும். ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்ப முடியாது. பரிந்துரை செய்வதுடன் அரசின் கடமை முடிந்தது. விடுதலை செய்ய மாநில அரசு நினைத்தாலும், மத்திய அரசின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. எனவே நளினியின் சிறை சட்டவிரோத காவல் இல்லை" என தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு தரப்பில் கூறியதாவது, "மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில் மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும். உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படியே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே நளினியின் காவல் சட்டவிரோத காவல் இல்லை. விடுதலை குறித்த தமிழ்நாடு அரசின் கடிதத்தை நிராகரித்துவிட்டோம். மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை தமிழக அரசின் தீர்மானத்துக்கு மதிப்பில்லை. அதனால் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

அமைச்சரவை ஆலோசனைக்கு அளுநர் கட்டுப்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்படமுடியாது. தமிழ்நாடு அரசை ஆளுநர் நடத்துகிறாரா? அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் நடத்துகிறதா? என சந்தேகம் எழுகிறது என மனுதாரரான நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை அனைவரும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீரப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் பார்க்க: ‘ஏழு தமிழர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும்’ - இல. கணேசன்

ABOUT THE AUTHOR

...view details