சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) வினா விடை நேரத்தில் எழுப்பபட்ட கேள்விகளையும் அதற்கு, துறை சார்ந்த அமைச்சர்கள் அளித்த பதிலுரைகள் என காரசாரமாக நடந்தவற்றை இங்கு காணலாம்.
ராமேஸ்வரத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுமா?: ராமேஸ்வத்தில் அரசு பணியாளர்களுக்கு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட வேண்டும் என ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதலளித்த வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி, அரசுப் பணியாளர்கள் எத்தனை பேர் அங்கு இருக்கின்றனர்? அவர்களுடைய தேவை என்ன? என கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாகவும், ஏனென்றால் வீட்டு வசதி வாரியம் முலம் அரசுப் பணியாளர்களுக்காக பல இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடிகள் விற்கப்படாமல் இருப்பதாகவும் பதிலளித்தார். மேலும், நீண்டநாள் விற்கப்படாமல் இருக்கும் அவற்றை இடித்து புதிய கட்டிடம் கட்டும் நிலை ஏற்பட்டதாகவும் பேசினார்.
தோழி விடுதிகள் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி:மதுராந்தகம் தொகுதியில் பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதி அமைக்க வேண்டுமென சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் அமைக்கும் பணிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறிப்பாக ஏற்கனவே அடையாறு, விழுப்புரம், வேலூர், தஞ்சாவூர், பெரம்பலூர் , திருநெல்வேலி, சேலம், திருச்சி, கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தோழி விடுதி செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் தாம்பரம், திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரி, செண்ட் தாமஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் தோழி விடுதி கட்டும் பணி நடைபெற்று வருவதாக கூறினார். அதேபோல மதுராந்தகம் தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் தோழி விடுதிகள் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பதிலளித்தார்.