கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்றுடன் ஊரடங்கு முடியவிருந்த நிலையில், மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் ரயில்கள், விமானங்கள், பேருந்துகள் என அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் முடக்க அரசு உத்தரவிட்டது.
இதனால் சென்னையில் பணிபுரியும் ஏராளமான வெளி மாநிலத்தினர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்கள் சமூக நலக்கூடம் மற்றும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு, அரசு உதவிகளை வழங்கி வருகிறது.
பல்வேறு பயணிகள் ஏப்ரல் 15ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி, மே 3 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாததைக் கண்டு அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று சொந்த ஊருக்குச் செல்ல முடியாத அதிருப்தியில் 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் வருவதற்கு வாய்ப்புள்ளதால் அங்கு கூடுதலாக காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:கரோனா: ரயில் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள், விசாரணைக்கு உத்தரவிட்ட அமைச்சர்