சென்னை: சென்னையில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 10) மாலை 3.45 மணிக்கு சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் 127 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்த நிலையில், இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படாமல் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து பயணிகள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், மாலை 4.30 மணிக்கு, அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மோசமான வானிலை நிலவுவதால் விமானம் சீரடி செல்லாது என்றும் பயணிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள், மோசமான வானிலை நிலவுவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதிதான் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இதே டிக்கெட்டில் நாளை விமானத்தில் பயணிகள் பயணிக்கலாம் எனவும், இல்லையேல் துர்காப்பூர் செல்லும் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக சீரடி செல்லலாம் என்றும் கூறி பயணிகளை சமாதானம் செய்தனர். இருப்பினும் பயணிகள் விமான ரத்து குறித்து முன்னரே அறிவிக்கா நிலையில் பெரும் அவதி அடைந்தனர்.
இதனிடையே நேற்று சென்னை விமான நிலையத்தில் அந்தமான், பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோல் மதுரை, மும்பை விமானங்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆகின.