தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2021, 8:36 AM IST

ETV Bharat / state

கோ-ஆப்டெக்ஸ் நேரப் பிரச்சினை: தீர்வுகாண ஓபிஎஸ் அறிவுறுத்தல்

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும்படி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பணி நேரப் பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண அரசு அலுவலர்களுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் வேட்டி - சேலை வழங்கும் திட்டம், பள்ளி மாணவ - மாணவியருக்கான விலையில்லா சீருடை வழங்கும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டத்திற்கான வேட்டி - சேலை வழங்கும் திட்டம் ஆகிய அரசுத் திட்டங்களைச் செயல்படுத்திவருவதோடு, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சந்தைப்படுத்துவதில் உறுதுணையாக இருந்து கைத்தறி ரகங்களைப் பிரபலப்படுத்துதல், வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பாரம்பரியம், நவீன ரகங்களை உருவாக்குதல், பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல், கைத்தறி நெசவாளர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டுவரும் நிறுவனமாக ' கோ-ஆப்டெக்ஸ் ' விளங்குகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கைத்தறித் துறைக்கு என தன்னிகரற்ற பங்களிப்பை அளித்துவருவதோடு, நெசவாளர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்பினை வழங்கி, தன்னுடன் இணைக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் துணிகளை நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறது.

நேர நீடிப்பு

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் விற்பனையகங்களில் பல ஆண்டுகளாக இரவு 8 மணிவரை இருந்த பணி நேரம் தற்போது இரவு 9 மணி வரை என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து பல பேருந்துகள் மாறி பணிக்கு வரும் பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பேருந்துகள் கிடைக்காமல் பெண்கள் அவதிப்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளது.

பல விற்பனையகங்களில் கழிப்பிட வசதிகள் இல்லை. தற்காலிக ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. சில அலுவலர்கள் பெண் ஊழியர்களிடம் தகாத சொற்களைப் பயன்படுத்துகின்றனர். விற்பனையில் சரிவை ஏற்படுத்தும் செயல்கள் நடைபெறுகின்றன.

தீர்வு காண்க!

அதற்குத் தீர்வுகாணும் வகையில் உரிய அமைச்சர்களுக்குப் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தப் பயனும் இல்லை. அதனால் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி கோ-ஆப்டெக்ஸ் தலைமையகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதும், போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியதும் மாநில அரசின் கடமை. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுடைய பிரச்சினைக்குப் பேச்சுவார்த்தை மூலம் விரைந்து தீர்வுகாண, தொடர்புடைய அமைச்சருக்கும், அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: டெங்கு பரவலைத் தடுக்க நடவடிக்கை - ஓபிஎஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details