தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 3, 2022, 10:59 PM IST

Updated : Jun 4, 2022, 12:01 PM IST

ETV Bharat / state

வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை - கடுப்பான ஈபிஎஸ்!

தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை - கடுப்பான இபிஎஸ்!
வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க அவசியமில்லை - கடுப்பான இபிஎஸ்!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் மாநிலங்களவைத் தேர்தலுக்கான சான்றிதழை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ், “மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், காவல்துறையை சரியாக கவனிக்காத காரணத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யும்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக முதலமைச்சர் கூறிய அன்றைய தினமே, சென்னையில் ரவுடிகள் அட்டகாசம் பற்றி ஊடகங்களில் செய்து வந்தது. தமிழ்நாட்டில் தினந்தோறும் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே கிடையாது. வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதையெல்லாம் இந்த அரசு தட்டிக்கேட்கத் தகுதியில்லாத, திறமையில்லாத அரசாக உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு கூட்டுப் பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஈபிஎஸ் ஆவேச போச்சு

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. திமுகவைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகுந்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறார்கள். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவல் துறை சுதந்திரமாக செயல்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா விற்காத இடங்களே இல்லை. அதை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலையில்தான் திமுக அரசு உள்ளது.

வி.பி.துரைசாமி மீது தாக்கு: ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கு துணை நிற்கின்றனர் என்ற சந்தேகம் எழுவதாகவே இருக்கிறது. ஸ்டாலின், நேரடியாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் விமர்சனம் வந்து விடும் என்பதற்காக கொல்லைப்புறத்தில் அமைச்சராக்க முயற்சி செய்கிறார்.

பாஜகவின் வி.பி துரைசாமி எப்படி பேசுகிறார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். வி. பி.துரைசாமி எங்கிருந்து எங்கு சென்றார் என்றும் நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர் அதிமுகவிற்கு சான்று அளிக்க அவசியமில்லை” எனப் பேசினார்.

முன்னதாக, அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னயன், “அதிமுகவை பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜக வளர நினைக்கிறது. அதிமுகவினர் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்வது நல்லதல்ல” என பேசியிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, “பொன்னையனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜகவை இப்படி பேசுகிறார். மக்கள் பிரச்னைகளை வெளிக்கொணர்வதில் அதிமுக வலுவாக செயல்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலுவாக செயல்படவில்லை. யாருடைய தயவிலும் பாஜக வளர அவசியமில்லை” எனப் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் பொன்னையனின் கருத்து குறித்து ஓ.பி.எஸ்சிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பாஜக குறித்து விமர்சனம் செய்த பொன்னையன் பேசிய கருத்து அவருடைய சொந்தக் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது” எனப் பதிலளித்தார்.

இதையும் படிங்க:'யாருடைய தயவிலும் பாஜக வளர அவசியமில்லை' - அதிமுக மூத்த தலைவருக்கு பதிலடி கொடுத்த பாஜக!

Last Updated : Jun 4, 2022, 12:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details