வேளாண்மைக்கு கால்நடை வளர்ப்பு முக்கியம் என்ற, 'உயிர் சுழற்சி' அறிவியலை எளிமையாக விளக்கியவர் வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார். சுனாமி பாதித்த விளைநிலத்தை மீட்டெடுத்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
'ஐந்தாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்யல; 5000 ரூபாய் கடன் வாங்குன விவசாயிதான் நாண்டுகிட்டு சாவுறான்' என்று கன்னத்தில் அறைந்ததுபோல் ஆளும் வர்க்கத்தை கேள்விகளால் துளைத்தெடுத்தவர்.
பேரிகை என்ற இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை நடத்தினார். மரபணு மாற்ற விதைகளுக்கு எதிரான போர்வீரர். சிறிதளவாவது இயற்கை வேளாண்மை தமிழ்நாட்டில் மிச்சமிருக்கிறதென்றால் அதற்கு நம்மாழ்வாரே மிக முக்கியக் காரணம்!
வேளாண்மையே இயற்கை என்று புரிதல் இல்லாமல் இவரைப் போன்றோரே 'விவசாயி', மற்றவர் 'செயற்கை விவசாயி' என்று புரியவில்லை! இயற்கை எய்தினார் என்ற சொற்றொடர் மிகச்சரியாகப் பொருந்தியது நம்மாழ்வாருக்கு மட்டும்தான்.
1938ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த நம்மாழ்வார், இளங்கலை விவசாயம் பயின்று, கோவில்பட்டி அரசு வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சிறிது காலம் பணியாற்றினார்.
ஒட்டுமொத்த அரசுத்துறையும் வேளாண் தொழில் நிறுவனங்களின் முகவர்களாக மாற்றப்பட்டதையும், ஒட்டுமொத்த வேளாண்மை வெளி இடுபொருள்களைச் சார்ந்து அதிக செலவு பிடிக்கும் தொழிலாக மாற்றப்பட்டதையும், வேளாண் நிலம் வேதி உப்புகளைக் கொட்டும் களமாக மாற்றப்பட்டதையும் கண்ட நம்மாழ்வார் இந்த அழிவுப் பணியில் தாமும் பங்குதாரராக இருக்க விரும்பாமல் அப்பணியிலிருந்து வெளியேறினார்.
இயற்கையோடு இயைந்த வாழ்வு, வெளி இடுபொருள்கள் சாராத தற்சார்பான வேளாண்மையே மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் என்று உணர்ந்த நம்மாழ்வார் அதைப் பரப்புவதையே தம் வாழ்நாள் பணியாக முடிவுசெய்தார்.
இது அடுத்தடுத்தத் தளங்களில் அவருடைய கவனம் விரிவடையக் காரணமாயிற்று. அரசு முன்வைத்துள்ள கல்வி முறை, பொருளியல் கொள்கை, ஆட்சி முறை ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தற்சார்பை குலைத்து வருவதை எதிர்த்துப் போராடினால் அன்றி வேளாண்மையை மட்டும் தனியாக பாதுகாத்துவிட முடியாது என்று உணர்ந்த நம்மாழ்வார் பன்முகத் தளங்களில் தமது பணிகளை விரிவுபடுத்தினார்.