தமிழ்நாடு

tamil nadu

Murugappa Group : முருகப்பா குழும குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு.. புரிந்துணர்வு ஒப்பந்தம்!

By

Published : Aug 21, 2023, 11:07 AM IST

முருகப்பா குழுமத்தில் நிலவிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களிடையே நீடித்த பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

Murugappa
Murugappa

சென்னை : நீண்ட நாட்களாக நீடித்து வந்த முருகப்பா குழுமத்தின் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமூக முடிவு மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் முருகப்பா குழுமத்தில் பாரிஸ் சர்க்கரை, டிஐ சைக்கிள்ஸ், சோழமண்டலம் பைனான்ஸ், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், சோழமண்டலம் இன்சூரன்ஸ், கோரமண்டல் இன்ஜினியரிங், சாந்தி கியர்ஸ், கோரமண்டல் இண்டர்நேஷனல் உரக் கம்பெனி உள்ளிட்ட 28 நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

முருகப்பா குழுமத்தின் நிறுவனங்களை அம்பதி இன்வெஸ்ட்மெண்ட்ஸ் (Ambadi Investments Ltd) என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழு முருகப்பா குழுமத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில், முருகப்பா குழுமத்தை தலைவராக இருந்து நிர்வகித்து வந்த எம்.வி முருகப்பன் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்தார்.

அதன்பின், அவருடைய மூத்த மகளான வள்ளி அருணாச்சலம், அம்பதி இன்வெஸ்மெண்ட்ஸ் கம்பெனியின் இயக்குநர் குழுவில், இயக்குநராக தன்னை நியமிக்குமாறு கேட்டார். இருப்பினும் அவருக்கு அதிகாரம் மறுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக பிரச்சினைகள் அவ்வப்போது பூதாகரம் எடுத்து வந்தன.

இருப்பினும், முருகப்பா நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து ஏறுமுகம் காட்டி வந்த நிலையில், இந்த பிரச்சினை அடிக்கடி வெளியுலகத்தில் தலை தூக்கியது. அம்பதி நிர்வாக குழுவில் உறுப்பினர் அந்தஸ்து வழங்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வள்ளி அருணாச்சலம் தெரிவித்து இருந்தார்.

நீண்ட நாட்களாக நீடித்து வந்த இந்த பிரச்சினையில் தற்போது நிவாரணம் கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முருகப்பா குழுமத்தின் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், குடும்ப உறுப்பினர்களிடையே தீர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முருகப்பா குழுமம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், முருகப்பா குழுமத்தின் குடும்பத்தினருக்கு இடையேயான பிரச்சினைகள் மற்றும் கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டு உள்ளதாகவும், அந்த பிரச்சினைகள் குறித்த ரகசியத் தன்மையை கருத்தில் கொண்டு மற்ற உறுப்பினர்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், முருகப்பா குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அதை பேணவும், நடப்பு மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு அதை கொண்டு செல்லவும் திட்டமிட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசகர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் முருகப்பா குழுமத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பங்கு பிரிவினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு முருகப்பா குழும குடும்ப உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி முருகப்பா குழும குடும்ப உறுப்பினர்கள், தங்களது சக குடும்ப உறுப்பினர்கள் மீது தாக்கல் செய்த சட்ட நடவடிக்கைகளை திரும்பப் முடிவு செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள முருகப்பா குழுமத்தின் 11 நிறுவனங்கள், குடும்ப சொத்தாக கருதப்படாது என குடும்ப உறுப்பினர்களிடையே தெளிவுபடுத்தப்பட்டதாகவும், அதன் நிர்வாகம் மற்றும் சிறப்பு உரிமைகள் எதுவும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கார்போரண்டம் யுனிவர்சல் லிமிடெட், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட், கோரமண்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடெட், கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட், EID Parry இந்தியா லிமிடெட் மற்றும் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆப் இந்தியா லிமிடெட் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் முருகப்பா குழுமத்தில் இருந்து பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :ஜம்மு காஷ்மீரில் தொடரும் என்கவுண்டர்.. பதற்ற நிலை.. பாதுகாப்பு படை- பயங்கரவாதிகள் மோதல்!

ABOUT THE AUTHOR

...view details