தமிழ்நாடு

tamil nadu

பட்ஜெட்டில் சொன்னதை செய்யவில்லையா?-பாமகவுக்கு அமைச்சர் பதில்

By

Published : Mar 5, 2022, 8:34 PM IST

பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெளியான செய்திக்கு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து பதில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை : 2021-2022ஆம் ஆண்டு வேளாண்மைத் துறையின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மொத்த அறிவிப்புகளில் 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக 'தனியார்' தமிழ் பத்திரிக்கையில் செய்தி வெளியானது.

இந்த செய்திக்கு, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த 2021-2022 ஆம் ஆண்டு வேளாண்மைத் துறைக்கு என முதன் முறையாக தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) அமைச்சரால் (வேளாண்மை-உழவர் நலன்) சட்டப்பேரவையில் 2021 ஆகஸ்ட் 14 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் மொத்தம் 86 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டுள்ள 2022-2023 ஆம் ஆண்டின் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கையில் அரசு அறிவித்துள்ள 26 அறிவிப்புகள் செயல்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, 26 அறிவிப்புகளில் 25 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவற்றில் வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு, நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம், மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு, கொல்லிமலையில் மிளகு பதப்பபடுத்தும் மையம், முருங்கை சிறப்பு ஏற்றுமதி மண்டலம், உணவு பதப்படுத்துதலுக்காக தனி அமைப்பு, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைத்தல், கூட்டுப் பண்ணையத் திட்டம், அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் மற்றும் சிக்கன நீர்ப்பாசன திட்டம் ஆகிய முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் அடங்கும்.

திருச்சி - நாகப்பட்டினம் பகுதியினை வேளாண் தொழில் பெருந்தடமாக அறிவிப்பது குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் ஒப்பந்தபுள்ளி நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் இத்திட்டத்திற்கான ஆணைகள் வெளியிடப்படும். எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதி அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மறுக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : மறைமுக தேர்தலில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்: தொல்.திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details