தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் குறித்து சர்ச்சை கருத்து.. சி.வி சண்முகம் மீதான அவதூறு வழக்கு.. தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 18, 2024, 8:14 PM IST

cv shanmugam defamation case: தமிழக அரசு தொடர்ந்த நான்கு அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கு
சி.வி சண்முகம் தொடர்ந்த வழக்கு

சென்னை:பன்னிரண்டு மணி நேர வேலை நேரம் குறித்த தமிழக அரசின் சட்டத்திருத்தம், வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியது, கஞ்சா புழக்கம், மதுபான விற்பனை ஆகியவை தொடர்பாக நடந்த போராட்டங்கள் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

இந்த விவகாரங்கள் மூலம் அரசு மற்றும் முதலமைச்சரின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்ததாக கூறி சி.வி.சண்முகத்திற்கு எதிராக 4 அவதூறு வழக்குகளை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்தது. இவற்றை ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, முதல்வரை தாக்கியோ? நேரடியாகவோ? பேசவில்லை என்றும், தமிழக அரசை மட்டுமே விமர்சித்ததாகவும், தங்கள் போராட்டத்திற்கு பிறகு 12 மணி நேர வேலை அரசு அறிவிப்பை திரும்பப் பெறப்பட்டது. அதனால், தங்கள் கருத்து எப்படி அவதூறாக கருத முடியும் என வாதிட்டார்.

அவதூறு வழக்கு தொடர்வதற்கான அரசாணையை பிறப்பிக்கும்போது அரசு அதிகாரிகள் மனதை செலுத்தி விசயத்தை ஆராயாமல், இயந்திரத்தனமாக அவதூறு வழக்குகளை தாக்கல் செய்வதாக குற்றம்சாட்டினார். அப்போது நீதிபதி, அரசை விமர்சித்த அதேவேளையில், முதல்வர் பெயரையும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளதாகத் தானே அவதூறு வழக்கு ஆவணங்களில் உள்ளது என சி.வி.சண்முகம் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.

அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, கஞ்சா அரசு, டாஸ்மாக் அரசு, தாலியை பிடித்து இழுக்கும் அரசு, கஞ்சா முதல்வர், தமிழகத்தில் மாணவிகள் கூட்டு பலாத்காரம் தான் நடக்கிறது என சி.வி.சண்முகம் பேசியுள்ளதாக குறிப்பிட்டு, அரசின் மீதும் முதல்வர் மீதும் நேரடி தாக்குதல் நடத்தி உள்ள நிலையில், எப்படி அவதூறு கருத்து இல்லை என குறிப்பிட முடியும் என கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:குஜராத்தில் படகு கவிழ்ந்து 14 மாணவர்கள் உயிரிழப்பு! சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

ABOUT THE AUTHOR

...view details