தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 4:11 PM IST

ETV Bharat / state

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Tamil Nadu Weather Update: சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மாலையில் கனமழை வெளுத்து வாங்கியது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அண்மைக் காலமாகக் காலை நேரத்தில் வெயிலும், மாலை நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்து இரண்டு நாள்களுக்கு மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தினங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அக்டோபர் 8ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளாது. மேலும், அடுத்த வாரம் வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சில பகுதிகளில் மழைக்கும் வாய்ப்பு இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை நகரில் இன்று (அக்.06) மதியம் 12.30 அளவிலிருந்து மழையானது பெய்தது. சென்னையின் முக்கிய பகுதிகளான, சேப்பாக்கம், தேனாம்பேட்டை, தி.நகர், எழும்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையானது பெய்தது. சென்னையில் இடைவிடாமல் பெய்யும் மழையால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் அனைவரும் மழையில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் சென்னையில் முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, உள் வட்டச்சாலை, ஈவேரா பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வானிலை தகவல்: மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (அக்.06) மற்றும் நாளை (அக்.07) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இனி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் அதிக மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வெளியூர் போகும் பிளான் இருந்தா பாத்து மக்களே..! தமிழகத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு..

ABOUT THE AUTHOR

...view details