சென்னை: ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோயில்கள் இடிக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவரான வினோஜ் பி. செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவு உண்மைக்கு மாறான தகவலுடனும், வதந்தியைப் பரப்பி, இரு பிரிவினரிடையே வெறுப்பு மற்றும் பகைமையை உருவாக்கி, பொது அமைதியைக் குலைக்கும் வகையில் உள்ளதாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில் விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸார், வினோஜ் பி. செல்வம் மீது கலகத்தை ஏற்படுத்துதல், இரு சமூகத்தினர் இடையே விரோதத்தைத் தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி தமிழ்நாடு பாஜக இளைஞர் அணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். செய்தித்தாளில் வந்ததை டிவிட்டரில் பதிவிட்டதாகவும், கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், பாஜகவிற்கு பரப்புரை செய்யும் வகையிலேயே பதிவிட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.