சென்னை சைதாப்பேட்டையில் கனரா வங்கியுடன் இணைந்து சிண்டிகேட் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் கடந்த 2015ஆம் ஆண்டு அரக்கோணத்தைச் சேர்ந்த ஜோசப் செல்வராஜ் (42) வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து தனி நபர் கடன், முத்ரா கடன், இருசக்கர வாகனக் கடன் என சுமார் 3 லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாக பெற்றுள்ளார்.
பின்னர் வாங்கிய கடனுக்கு வட்டியும் செலுத்தாமல் தலைமறைவாகி இருந்து வந்துள்ளார். இதனால் ஜோசப் செல்வராஜ் அளித்த ஆவணங்களை ஆய்வு செய்த போது போலியான வருமான வரி சான்றிதழைக் கொடுத்து வங்கியை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சிண்டிகேட் வங்கியின் மேலாளர் சௌமியா மத்தேயு, இதுகுறித்து காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் வங்கி மோசடி தடுப்புப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜோசப் செல்வராஜை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.