தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2021, 4:34 PM IST

ETV Bharat / state

ஜெயலலிதா பல்கலைக்கழக எல்லை வரையறை விவகாரம்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு ரத்து

விழுப்புரம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக அதிகார வரம்புக்குட்பட்ட பகுதியில் கல்வி மையத்தின் மூலம் முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

villupuram
விழுப்புரம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களின் நலனுக்காக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள கல்வி மையம் மூலம், ஏழு முதுகலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்களை வரவேற்று, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டது.

இதை ரத்து செய்யக் கோரியும், ஜெயலலிதா பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்கக்கோரியும், முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறி, அதுதொடர்பான அரசாணையை தாக்கல் செய்தார்.

முன்னாள் அமைச்சர் சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், "தற்போதைய நிலையில், ஜெயலலிதா பல்கலைக்கழகச் சட்டம் அமலில் உள்ளதால், அதைப் பின்பற்ற வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழக அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும், அதுவரை அச்சட்டம் அமலில் இருக்கும் என்பதால், அச்சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும்.

விழுப்புரம் மையத்தின் மூலம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை எனக்கூறி, அந்த அறிவிப்பை ரத்து செய்து, முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை முடித்து வைத்தனர்.

விசாரணையின் போது, ஆட்சி என்பது சைக்கிள் போல மாறி மாறி வரும் என்ற போதும், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பின்பற்ற வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:இந்தியன் 2 வழக்கு: தனி நீதிபதி உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்குப் பட்டியலிட அனுமதி

ABOUT THE AUTHOR

...view details