தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2022, 3:08 PM IST

ETV Bharat / state

டிஎன்பிஎஸ்சி பணிக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை அறிமுகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி இன்று (மார்ச் 29) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குருப் 1, 2, மற்றும் குரூப் 4 பணிகளில் அடங்கிய பதவிகள் நீங்கலாக மற்ற அனைத்து நேரடி நியமனங்களுக்கான பதவிகளுக்கும் இணைய வழியில் விண்ணப்பம் செய்வதில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படவுள்ளது.

உரிமை கோரல்:விண்ணப்பதாரர்கள் இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் பொழுதே, அவர்களால் இணையவழி விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள், உரிமை கோரல்களுக்கு (claim) ஆதாரமான அனைத்துத் தேவையான சான்றிதழ்களையும் இணையவழி விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் பொழுதே, அனைத்து ஆதார சான்றிதழ்களையும், ஆவணங்களையும் PDF வடிவத்தில் அதாவது (ஒன்று அல்லது பல பக்கங்கள் கொண்ட) 200 KB-க்கு மிகாமல் உள்ள ஒரு PDF ஆவணமாக ஒவ்வொரு உரிமை கோரலுக்கும் ஆதாரமாகக் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இ.சேவை: பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் குறித்த தகவல்கள் நேரடி நியமனங்களுக்காக தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளில் காணப்பெறலாம். விண்ணப்பதாரர் இ.சேவை மையங்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் தேவையான சான்றிதழ்களை ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனவே, இனி வருங்காலங்களில் தேர்வாணையத்தின் அறிவிக்கைகளின் அடிப்படையில் விண்ணப்பிக்க விரும்பும் அனைத்துத் தேர்வர்களும் தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் மேற்குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய ஏதுவாக, முன்னரே scan செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தேர்வு: பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர் தங்களது ஒருமுறைப் பதிவின் (One Time Registration) மூலம் சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் சான்றிதழ்கள் தவறாகப் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தாலோ விண்ணப்பதாரர் விண்ணப்பித்திருந்த பதவிக்கான தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

அதாவது தேர்வு நடைபெற உள்ள தேதிக்கு 12 நாள்கள் முன்னர் வரை சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய, மறுபதிவேற்றம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட நாளன்றோ அல்லது அதற்கு முன்னரோ, தேவையான ஆதார ஆவணங்களைப் (சரியாகவும் / தெளிவாகவும் / படிக்கக்கூடியதாகவும்) பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரரின் இணையவழி விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

சான்றிதழ் பதிவேற்றம்: எழுத்துத் தேர்விற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது முற்றிலும் விண்ணப்பதாரரால் இணையவழியில் விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்களின் அடிப்படையிலேயே அமையும். எழுத்துத் தேர்விற்குப் பின்னர் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக தனியாக எந்த அறிவிப்பும் தேர்வாணையத்தால் அனுப்பப்படமாட்டாது.

கூடுதல் விளக்கம்:எனவே, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள், ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதில் அதிக அக்கறையுடனும் எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படின், helpdesk@tnpscexams.in / grievance.tnpsc@tn.gov.in என்ற தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது தேர்வாணையத்தின் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு (Toll free Number) அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கடலூரில் காதலன் கண்முன்னே காதலி பாலியல் வன்கொடுமை!

ABOUT THE AUTHOR

...view details