முன்னாள் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய டி.என். சேஷன் நேற்று இரவு காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் சேஷன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "1996ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டபோது தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அறிவிப்பாணை வெளியிடப்பட்டதுக்கு பின்பு புதிய கட்சியை பதிவு செய்யமாட்டார்கள். அந்த நேரத்தில் ப. சிதம்பரம் மூன்று நாள்கள் டி.என். சேஷன் இல்லத்திலிருந்து இதற்கான வேலைகளில் ஈடுபட்டார். தமாகாவுக்கு உயிர் கொடுத்தவர் டி.என்.சேஷன்.
இப்போது கே.எஸ். அழகிரி போன்றவர்கள் எம்.எல்.ஏ. ஆனதற்கு இதுதான் காரணம். தமிழ் மாநில காங்கிரஸ் உதயமாக சின்னம் கொடுத்து உதவியவர். 1994ஆம் ஆண்டு வைகோ மதிமுக தொடங்கியபோது திமுக சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டது. திமுக சின்னம் முடங்காமல் காப்பாற்றியவர் டி.என். சேஷன். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் சிலை வைக்க வேண்டும். தமாகாவும் திமுகவும் அவரை மறக்க முடியாது. நன்றிக்கடனாக அஞ்சலி செலுத்த வந்தேன்" என்றார்.