தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 27, 2020, 11:36 AM IST

Updated : May 27, 2020, 12:19 PM IST

ETV Bharat / state

தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் வேதா இல்லம்

jayalalitha's vedha illam case
jayalalitha's vedha illam case

11:24 May 27

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வேதா இல்லத்தை தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்ற தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் எதிர்மனுதாரராக  சேர்க்கப்பட்டு, தங்களுக்குத்தான் சொத்தில் உரிமை உள்ளது என நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.

மேலும்  40 கோடி ரூபாய் வருமான வரி நிலுவையில் இருப்பதால், ஜெயலலிதாவின் வேதா இல்லம், பெங்களூருவில் உள்ள சொத்துக்கள் உள்பட சிலவற்றை வருமானவரித்துறை முடக்கியுள்ளதாக வருமான வரித்துறை  உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.  

இதையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல்குத்தூஸ் அடங்கிய அமர்வு கடந்த ஆகஸ்ட் 30 அன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை காணொலி காட்சி மூலமாக நீதிபதிகள் இன்று வழங்கினர்.அதில்,  மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து வேதா இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

போயஸ் தோட்ட இல்லத்தில் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றிவிட்டு மீதமுள்ள பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாகவும் மாற்ற வேண்டும்.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒரு பகுதியை மட்டும் அறக்கட்டளையாக அமைக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் அண்ணன் வழி உறவினர்களான தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக இந்நீதிமன்றம் அங்கீகரிக்கிறது.

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு 8 வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என  உத்தரவிட்டுள்ளது.  

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் இல்லத்தை, நினைவு இல்லமாக்க அவசர சட்டம்!


 

Last Updated : May 27, 2020, 12:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details