தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2023, 7:07 AM IST

ETV Bharat / state

திருமாவை தொடர்ந்து சீமான், கிருஷ்ணசாமியை சந்திக்க காயத்ரி ரகுராம் திட்டம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்த நிலையில், நடிகை காயத்ரி ரகுராம் அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் நேற்று (பிப்.21) விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க திட்டமிடுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், மாநில தலைவர் அண்ணாமலையுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் அண்ணாமலை அக்கட்சிக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாதவர் என்பன உள்ளிட்ட பல விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக நடிகை காய்த்ரி ரகுராம் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையில் நேற்று(பிப்.22) விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை, நடிகை காயத்ரி ரகுராம் நேரில் சென்று சந்தித்தார்.

காயத்ரி ரகுராம் - திருமாவளவன் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியது. இதுகுறித்து பதில் அளித்த திருமாவளவன், "எனக்கும் காயத்ரி ரகுராமிற்கும் கருத்து மோதல்கள் இருந்தாலும், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" எனக் கூறினார். இந்த சந்திப்பு குறித்து பேசிய நடிகை காயத்ரி ரகுராம், "நான் விசிகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

நான் திருமாவளவனை மரியாதை நிமித்தமாகவே சந்திதேன். நான் பாஜகவில் இருந்த போது அவரை கடுமையாக விமர்சனம் செய்தேன். ஆனால், அதையெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல், பாஜகவில் இருந்து நான் விலகியபோது ஆறுதல் கூறினார்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய நடிகை காயத்ரி ரகுராம், "நான் பாஜகவில் இருந்து விலகிய போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எனக்கு ஆதரவாக கடிதம் அனுப்பியிருந்தார். அதில், பொதுவாழ்வில் பெண்கள் சாதிக்க வேண்டும். அரசியலை விட்டு ஒதுங்காமல் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியையும் சந்திக்க இருக்கிறேன். நான் பாஜகவில் இருந்து விலகிய போது எனக்கு அலைபேசி மூலம் அழைத்து ஆறுதல் கூறினார். தன்னை போன்று அரசியலில் ஒதுக்கப்பட்ட பெண்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி 'சக்தி யாத்திரை' (Shakti Yatra ) மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்காக பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க போவதாகவும் கூறினார்.

இந்த 'சக்தி யாத்திரை'-க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என திருமாவளவனிடம் கேட்டபோது, அதற்கு அவர் ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளதாகவும், அவரைத் தொடர்ந்து சீமான், கிருஷ்ணசாமி போன்ற தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அனுப்பிய கடிதத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை காயத்ரி ரகுராம், "ஈரோடு இடைத் தேர்தலுக்குப் பிறகு திரு.சீமான் அண்ணனை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்ததற்காக நன்றி கூறுவேன்" என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விசிகவில் இணைகிறாரா காயத்ரி ரகுராம்?

ABOUT THE AUTHOR

...view details