தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 3, 2023, 10:45 PM IST

ETV Bharat / state

நிதி நிறுவன மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகி உள்ள 15 பேரை, தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். தலைமறைவானர்கள் பற்றி துப்பு கொடுத்தால், தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

தேடப்படும் குற்றவாளிகள்
தேடப்படும் குற்றவாளிகள்

சென்னை:தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிதி நிறுவனங்கள் என்ற பெயரில், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை வலையில் வீழ்த்தும் மோசடி நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டியுள்ளதாக புகார்கள் வருகின்றன. இதில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், எல்.என்.எஸ் இன்டர்நேஷனல் பைனான்சியல் நிறுவனம், ஹிஜாவு பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிதி நிறுவன மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

ஆருத்ரா நிறுவனம்:ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தின் மீதான மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு மே 20ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான 37 இடங்களில் சோதனை நடைபெற்றது. விசாரணையில் 1 லட்சத்து 9,255 பேர் அந்நிறுவனத்தில் ரூ.2,438 கோடியை முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது. இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைதான நிலையில், 5 பேர் தலைமறைவாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நிறுவன மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

எல்.என்.எஸ் நிறுவனம்:பாதிக்கப்பட்டவர்கள் அளித்தப் புகார்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி இந்நிறுவனத்துக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடந்தது. சுமார் 1 லட்சம் பேர், ரூ.6,000 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனம் மீதான வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 4 பேர் தேடப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹிஜாவு நிறுவனம்: கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி, இந்நிறுவனத்துக்கு சொந்தமான 21 இடங்களில் சோதனை நடந்தது. இந்நிறுவனத்தில் 4,500 பேர், ரூ.600 கோடியை முதலீடு செய்து பணத்தை இழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் ஒருவர் கைதான நிலையில், தலைமறைவான இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

நிதி நிறுவன மோசடி: 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

தேடப்படும் குற்றவாளிகள்: இந்நிலையில் ரூ.9,000 கோடியை மோசடி செய்த வழக்கில் 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். இதில் பலர் வெளிநாடுகளில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், இன்டர்போல் உதவியுடன் ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சன்மானம் அறிவிப்பு: 3 நிறுவனங்கள் மீது மோசடி புகார்கள் அளிக்க தனித்தனியா மின்னஞ்சல் முகவரிகளை காவல்துறை அறிவித்துள்ளது. தலைமறைவு குற்றவாளிகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள போலீசார், அவர்களை பற்றிய தகவல்கள் தெரிந்தால் கூறலாம் எனவும், துப்பு கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறும் நிறுவனங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: காலநிலை மாற்றத்தை கண்காணிக்க கலெக்டர் தலைமையில் தனிக்குழுக்கள்!

ABOUT THE AUTHOR

...view details