ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதேபோல மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும், வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்த அறிவிப்புக்கு பின் திமுக தலைமை, காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என்று அறிவித்தது. அதனடிப்படையில், திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்திடம் வாய்ப்பு கேட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவித்தது. இதனால் தொகுதியைத் தக்க வைக்க திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் பணிகளில் அதிதீவரமாக ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக, வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே அமைச்சர்கள் முத்துசாமி, கே.என். நேரு இருவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட தொடங்கிவிட்டனர்.