சென்னை: தலித் இன்டலெக்சுவல் கலெக்டிவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன், நாச்சியாள் சுகந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, “கடந்த ஓராண்டிற்கு மேலாக கள ஆய்வுகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் 14 கோரிக்கைகளை அரசிற்கு தெரிவிக்க உள்ளோம். தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் தேவையான அளவு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் உள்ளன. 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட விடுதிகளில் கழிப்பறைகள் முழுமையாக செயல்படுத்த முடியாமல் உள்ளது.
அதேபோல் நூலகங்களிலும் போதுமான அளவு நூலகர்கள் நியமனம் செய்யப்படவில்லை. எனவே விடுதிகளில் உள்ள மாணவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்தித் தர வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காலத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி பாடங்களில் பேரிடர் மேலாண்மை குறித்தும் சேர்க்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவித் தொகையினை இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்த்துவதற்கு பதிலாக, தற்போதுள்ள விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும்.