தமிழ்நாடு

tamil nadu

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள்.. பால் திருட்டு முயற்சியா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

By

Published : Jun 8, 2023, 7:04 AM IST

அம்பத்தூர் ஆவின் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் மனோ தங்கராஜ்!
ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது: அமைச்சர் மனோ தங்கராஜ்!

சென்னை: நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அம்பத்தூர் ஆவினில் பால் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் பணியமர்த்தபட்டது குறித்து நேற்று (ஜூன் 7) செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “ஆவின் நிறுவனத்தில் நிர்வாகம் சார்ந்த பணிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ஒப்பந்தப் பணியாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக, ஒப்பந்ததாரர்கள் தொழிலாளர் நல சட்ட விதிகளுக்கு உட்பட்டு பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதையும், அரசு நிர்ணயித்துள்ள ஊதியம் பிஎஃப், இஎஸ்ஐ ஆகியவற்றை சரிவர வழங்குவதை உறுதிப்படுத்துவதுடன், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இந்த செய்தியானது வேண்டுமென்றே ஆவின் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு சித்திகரிக்கப்பட்டது” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த செயலை செய்தவர்கள் மீது குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், ஆவின் போக்குவரத்து வழித்தட பிரிவுகளில் தவறுகள் நடைபெறுகிறதா என்பதை கண்டுபிடிக்கவும், அவற்றில் தேவையான நடைமுறை மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேற்கொண்ட விசாரணையில் வேலூர் மாவட்டத்தில் ஒரே எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து வழித்தட ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், “ஆவின் பால் பண்ணையில் சிறார்கள் பணியமற்றப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக வருகைப் பதிவேடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது மற்றும் சிசிடிவி கேமராக்கள் உள்ளது. இது மிக தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது” எனக் கூறினார். மேலும், “நான் நேரடியாக சென்று அம்பத்தூர் ஆவின் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டேன்.

18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை ஆவினில் அனுமதிப்பதில்லை. அதற்கான வருகைப் பதிவேடு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் உள்ளன. ஆகவே, 14 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் ஆவினில் பணிபுரிவதற்கான எந்த வித ஆதாரமும் கிடைக்கப் பெறவில்லை" என கூறினார்.

இதனையடுத்து, “ஆவினில் சிறார்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அதன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயார். வேலூரில் ஆவின் நிறுவனத்தில் ஒரே எண்களைக் கொண்டு இயங்கி வந்த வாகனங்களையும், அந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

ஆவினில் விற்கப்படும் மதிப்பு கூட்டு பொருட்களான லெஸ்சி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள் என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “இந்த கோடைகாலத்தில் ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனையில் 10 விழுக்காடு அதிகரித்து உள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் ஆவின் பால் உற்பத்தி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஆவின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயல் திட்டங்கள் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாவப்பட்ட பாகுபலி யானையை விரட்ட வெடிகள்; வேதனையில் சமூக ஆர்வலர்கள்! கண்டுகொள்ளுமா வனத்துறை?

ABOUT THE AUTHOR

...view details