தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 12, 2022, 11:40 AM IST

ETV Bharat / state

ரூ. 2,390 கோடி வாடகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை - அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் பாராட்டு

கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய ரூ. 2, 390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்க எடுக்கும் நடவடிக்கைக்காக இந்துசமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ரூ. 2,390 கோடி வாடகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை
ரூ. 2,390 கோடி வாடகை பாக்கி வசூலிக்க நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில் வாடகையை வசூலிக்க உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் நேற்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது.

அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் வரை வர வேண்டிய வாடகை பாக்கியான ரூ. 2,390 கோடியை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. காணொலி மூலம் ஆஜராகியிருந்த ஆணையர், ஒரு வருடத்திற்கு ரூ. 540 கோடி வசூலிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நாளொன்றுக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு அகற்றம், வாடகை வசூலில் காவல்துறை மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து கோயில்களின் சொத்துகள் தொகுப்பு, வாடகைதாரர்களின் பட்டியல், வாடகை செலுத்தாதவர்களின் பட்டியல் ஆகியவை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டது.

இதனையடுத்து அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். இதற்கிடையில் கோயில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், "அறங்காவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழுவை அமைப்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த 4 வாரங்களில் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்படும்" என உத்தரவாதம் அளித்தார்.

இதையும் படிங்க:கலர் தெரப்பி...எண்ணங்களை மேம்படுத்தும் வண்ணங்கள்...இது அறிவியல் பூர்வமானதா...?

ABOUT THE AUTHOR

...view details