தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 18, 2023, 10:13 PM IST

ETV Bharat / state

சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கினை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடத்த ஒப்புதல்!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை, ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை:கடந்த 2012ம் ஆண்டு 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராட்ஜிக் நிறுவனம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக அந்த நிறுவனம் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

ஆனால், இந்திய நீதிமன்றத்தில் தான் இந்த வழக்குத்தொடர முடியும் என்பதால் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை தொடர்ந்து நடத்துவதற்கு, அந்த நிறுவனத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி 2014ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து, சிங்கப்பூர் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது.

சிங்கப்பூர் நிறுவனத்தின் தரப்பில், சிங்கப்பூர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனவும், முதன்மை நிறுவனம் சிங்கப்பூரில் அமைந்துள்ளதால், சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில் எந்த தவறுமில்லை எனவும் வாதிடப்பட்டது.
அதேசமயம், சுப்பிரமணியன் சுவாமி தரப்பில், சிங்கப்பூரில் முதன்மை நிறுவனம் அமைந்திருந்தாலும், சென்னையில் துணை நிறுவனம் உள்ளது எனவும், நிறுவனத்தின் அதிகாரிகள் சென்னையில் தான் உள்ளனர் என்பதால் இந்தியாவில் தான் வழக்குத்தொடர முடியும் எனவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.

இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், சிங்கப்பூர் நிறுவனத்தின் வாதத்தை ஏற்று, தனி நீதிபதி தடை விதித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதன்மூலம் அந்நிறுவனம் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, தொடர்ந்து நடத்தலாம் என்பது உறுதியாகிறது.

இதையும் படிங்க: ’இன்று பில்கிஸ் பானோ.. நாளை..?’ - உச்ச நீதிமன்றம் அதிருப்தி

ABOUT THE AUTHOR

...view details