தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 11, 2021, 10:30 PM IST

ETV Bharat / state

கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைக்க எதிர்ப்பு!

பதவிக்காலம் முடியும் முன்பு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை கலைத்து, புதிதாக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

co operative association
co operative association

சென்னை:கூட்டுறவு சங்கங்களின் தற்போதைய நிர்வாகத்தைக் கலைத்து விட்டு, புதிதாக தேர்தல் நடத்துவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி, கடந்த 9ஆம் தேதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,கூட்டுறவு சங்கங்களைக் கலைக்க எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டம், இரும்பை கிராமத்தைச் சேர்ந்த கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சதீஷ்குமார், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முரளி உள்ளிட்ட ஆறு கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ”கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள், பெண்கள், ஏழைகள், நகைக்கடன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், விவசாயக் கடன்கள் பெற்று பயன்பெற்று வரும் நிலையில், கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மிரட்டும் வகையில் அமைச்சரின் பேட்டி அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் லாபகரமாக, நிதி ஸ்திரத்தன்மையோடு இயங்கி வருவதாகக் கூறிய அமைச்சரே, சங்கங்களை கலைக்க வேண்டுமெனத் தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கம் என்பது ஓர் தன்னாட்சி அமைப்பு எனவும், இவற்றை நிர்வகிக்க சட்டங்களும் நடைமுறைகளும் உள்ளபோது, திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் அந்த மனுவில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் 2023ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில், தங்களின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்த நிர்வாகிகள் பணி செய்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி மாவட்டம், அன்பில் பகுதி கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அருண் நேரு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’யானை வலசை பாதைகள் சூழ் இடங்கள் தனியார் காடாக அறிவிப்பு’ - இதற்கான முக்கியத்துவம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details