சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் மாதத்தில் சற்று தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், பரவலாக மழையானது பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது.
இந்த வடகிழக்கு பருவமழையால் தற்போது சென்னை மாநகரம், ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகள் போல சில்லென்று மாறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகும். அதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையிலும் இன்று 26 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பதிவான வெப்பநிலை:சென்னை 26 டிகிரி செல்சியஸ், கோவை 31.1 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரி 32.6 டிகிரி செல்சியஸ், ஊட்டி 18.9 டிகிரி செல்சியஸ், கொடைக்கானல் 16.9 டிகிரி செல்சியஸ், வால்பாறை 26 டிகிரி செல்சியஸ், குன்னுர் 19.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகி உள்ளது. இதில், அதிகபட்சமாகக் கன்னியாகுமரியில் 32.6 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது.
சில்லென்ற மாறிய சென்னை: சென்னை பொருத்தவரை, இந்த பருவத்தில் 30.5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். ஆனால் தற்போது பெய்து வரும் தொடர் மழையால், 5.5 டிகிரி செல்சியஸ் குறைந்து 26 டிகிரி செல்ஸியாக இருந்து வருகிறது. இதனால், சென்னை மாநகரமே குளிர்ந்துள்ளது.