கடந்த வருடம் டிசம்பர் மாதத்தில் சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது சற்றேரக்குறைய உலக நாடுகள் அனைத்திலும் பரவி பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திவருகிறது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாடுகள் அனைத்திலும் லாக் டவுன் எனப்படும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நமது நாட்டிலும் கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி, உலகளவில் 7 லட்சத்து 22 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவால் 900க்கும் மேற்பட்டவர்கள்பாதிப்புக்கப்பட்டு 29 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 6 வெளிநாட்டவர்கள் உள்பட 50 பேர் பாதிக்ப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து நோய் கண்டறியப்பட்டவர்களின் வீடுகளைச் சுற்றி 5 கி.மீ பரப்பளவில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துதுறை உத்தரவிட்டதையடுத்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இப்பணியினை இதற்காக நியமிக்கப்பட்டுள் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.
ஒரே நாளில் ஒரு லட்சம் நபர்களிடம் ஆய்வு - சென்னை மாநகராட்சி அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா பெருந்தொற்று நோய் கண்டறியப்பட்டவர்கள் 15 பேரின் வீடுகளிலிருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்னை மாநகராட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முதல் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்வோம் என மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் சைதாப்பேட்டை, தி.நகர், அசோக் பில்லர், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். நேற்று காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆய்வு பணி இரவு வரை நடைபெற்றது. நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ஒரு லட்சம் நபர்களை ஆய்வு செய்ததாக மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து அடுத்தடுத்த பகுதிகளுக்கு கரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை உதவும் என சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.