தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 8, 2020, 8:10 AM IST

ETV Bharat / state

சென்னையில் நூதன முறையில் உயர் ரக கேமரா திருட்டு!

சென்னை : தாய், மகன் என்று கூறி நூதன முறையில் மோசடி செய்து விலை உயர்ந்த கேமராவை இருவர் திருடிச்சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேமரா
கேமரா

சென்னை, விருகம்பாக்கத்தில் கேமரா வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் சரவணகுமார். இவர் பல நிறுவனங்களில் காணொலி பத்திரிகையாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவரை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி, மருத்துவ மாணவர் ஒருவருக்கு கேமரா தேவை எனக் கூறி நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அதற்கு, விருகம்பாக்கத்தில் உள்ள தனது கடையில் ஊழியர் விஜய் என்பவர் இருப்பதாகவும், கடைக்குச் சென்று உரிய ஆவணங்களை ஒப்படைத்து வாடகைக்கு கேமரா வாங்கிக் கொள்ளுமாறும் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து சரவணகுமாரின் கடைக்கு அம்மா, மகன் என்று கூறிக்கொண்டு சென்ற இருவர் வாடகைக்கு கேமரா கேட்டு, அங்கிருந்த ஊழியர் விஜய்யிடம் விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர். அப்போது மகன் வேடத்தில் சென்ற நபர், தான் ஒரு மருத்துவ மாணவன் எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்து, குறும்படம் எடுப்பதற்கு கேமரா வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரிடம் விஜய், குறிப்பிட்ட உயர் ரக கேமராவான கேனான் 5டி கேமராவையும் அதற்குண்டான லென்சையும் காண்பித்துள்ளார்.

இதையடுத்து பேசிக்கொண்டிருக்கும்போதே, ஆவணங்களைக் கொடுப்பது போன்று பாவனை காட்டி அந்த இருவரும் கடை ஊழியர் விஜய்யை திசைத் திருப்பி கேமராவை திருடிச் சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து கேமரா திருட்டுபோனதை உணர்ந்து சரவணக்குமாரிடம் ஊழியர் விஜய் தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, உடனடியாக சரவணக்குமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமரா மற்றும் லென்ஸ் திருடப்பட்டது தொடர்பாக சிசிடிவி ஆதாரங்களுடன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காததால், சரவணன் மோசடி செய்த இருவர் பற்றி தானே விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.

அப்போது அந்தப் பெண் கொடுத்த செல்போன் எண்ணைக் கொண்டு தேடியபோது, அவர் பெயர் சசிரேகா என்பதும், போரூரில் சசி என்ற பெயரில் பெண்கள் விடுதி ஒன்றை அவர் நடத்தி வந்ததும், சில பிரச்சனைகள் காரணமாக அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதும் தெரிய வந்தது.

இந்நிலையில், சரவணகுமார் தான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் காவல் துறையினரிடம் தெரிவித்தும் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கணவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details