சென்னை: சிறுபான்மை மக்கள் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு வழங்கவும், அரசியலமைப்பு சட்டப்படி மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் நேற்று (ஜூன் 6) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சி.பி.ஐ.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நலக்குழுவின் தலைவர் எஸ்.நூர்முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், "மன்னர் ஆட்சிக் காலத்தில் அரசன் எப்படி வேண்டும் என்றாலும் ஆட்சி நடத்தலாம். ஆனால், மக்கள் ஆட்சி காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தின்படி தான் ஆட்சி நடத்த வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒரே கடமை, சமூக பொருளாதாரத்தை பாதுகாப்பது மட்டும்தான்.