தமிழ்நாடு

tamil nadu

பாஜக நிர்வாகி பிபிஜி சங்கர் கொலை; 9 பேர் போலீசில் சரண் - 5ஆம் தேதி வரை சிறை!

By

Published : Apr 28, 2023, 8:34 PM IST

நசரத்பேட்டையில் பிரபல ரவுடியும், பாஜக நிர்வாகியுமான பிபிஜி சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரணடைந்த 9 நபர்களையும் வருகின்ற 5ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர், பிபிஜி சங்கர் (42). பிரபல ரவுடியான இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. வளர்புறம் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பாஜகவில் பட்டியலின மாநிலப் பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் காரில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார். அவரை கார் மற்றும் பைக்கில் வந்து வழி மறித்த மர்ம கும்பல், காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த கார் சிறிது தூரத்தில் நின்றது. இதனால் பயந்துபோன பிபிஜி சங்கர் உடனே காரில் இருந்த கத்தியை எடுத்து, கீழே இறங்கி அந்த கும்பலை மிரட்டிவிட்டு உயிர் தப்பித்து, சாலையின் எதிர் திசையில் ஓடியுள்ளார். அங்கு பதுங்கியிருந்த மற்றொரு கும்பல் சங்கரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

மக்கள் அதிகம் கூடும் பகுதியில் சினிமா பாணியில் நடைபெற்ற இந்தக் கொலையால் அங்கு பெரும்பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அப்பகுதி மக்கள் சங்கர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைப் பார்த்து உடனே காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை போலீஸார் ரவுடி சங்கர் உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

ரவுடி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட செய்திகேட்டு, அவரது ஆதரவாளர்கள் சம்பவயிடத்தில் ஒன்று கூடியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இக்கொலை சம்பவம் குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் பிரபல ரவுடியாக வலம் வந்த பி.பி.ஜி குமரனை கடந்த 2012ஆம் ஆண்டு இதே போல் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். தற்போது அதே போன்று பி.பி.ஜி சங்கரும் கொலை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பிபிஜி குமரன் இறந்த பின்பு பிபிஜி சங்கர் என்பவர், கொலை, கட்டப்பஞ்சாயத்து, அங்குள்ள தொழிற்சாலை கழிவுகள் எடுப்பது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். இதனால் பிபிஜி சங்கரின் கூட்டாளிகளே இவருக்கு எதிராக இருந்து வந்தனர். இதனால் பி.பி.ஜி சங்கருக்கு எதிரிகள் அதிகரித்து வந்தனர். அதேபோல் பிபிஜி சங்கர் போன்ற A+ ரவுடியை கொலை செய்தால் அதன் மூலம் ஸ்ரீபெரும்புதூரில் ரவுடி என்ற பட்டத்தைப் பெற்று, அதன் மூலம் கட்டப் பஞ்சாயத்து, தொழிற்சாலைகளில் ஸ்க்ராப் எனப் பணம் பார்க்கலாம் என்று ஒரு கூட்டம் இருந்து வந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிபிஜி சங்கர் வீட்டின் அருகே பிபிஜி சங்கரை கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ஒரு கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ரவுடிகள் கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சங்கர் எச்சரிக்கையாக இருந்து வந்தார். இதனால் எப்போதும் உடன் அடியாட்களுடன் செல்வது வழக்கம். ஆனால், நேற்று அவரது வழக்கமான காரில் செல்லாமல் வேறொரு காரில் தனியாக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொலையாளிகள் சங்கரை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொலை நடைபெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்குத் தொடர்பாக 9 பேர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி சக்திவேல் முன்பு சாந்தகுமார் மற்றும் உதயகுமார் மற்றும் கூலிப்படை கும்பல் என மொத்தமாக 9 பேர் சரணடைந்துள்ளனர்.

இதில் சாந்தகுமார் ஸ்ரீபெரும்புதூர் 15வது வார்டு கவுன்சிலர் என்பது தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சென்னை புறநகர் பகுதியைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் எனப்படும் குப்பைக்கழிவுகளை எடுப்பதில் கடந்த சில வருடங்களாக பிபிஜி சங்கருக்கும், இந்த கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் யாரையும் ஸ்கிராப் எடுக்கவிடாமல், தொடர்ந்து பிபிஜி சங்கர் தொந்தரவு செய்து வந்த காரணத்தினால், போட்டியில் இருந்த இந்திய குடியரசு கட்சியின் நிர்வாகி சாந்தகுமார் என்பவரும்; உதயகுமார் என்பவரும் தொழில் போட்டி காரணமாக பழிவாங்கும் எண்ணத்தில் இருந்துள்ளனர்.

சாந்தகுமார் மற்றும் உதயகுமார் தலைமையில் 15 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக உதயகுமார், சாந்தகுமார், ஜெகன் , குணா, சரத்குமார், ஆனந்த் சாந்தகுமார், சஞ்சு, தினேஷ் ஆகிய 9 பேர் சரணடைந்துள்ளனர். சரணடைந்த பெரும்பாலும் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றனர். இருப்பினும் இந்த கொலைச் சம்பவத்தில் சரணடைந்தவர்கள் உண்மையாக கொலை செய்தவர்கள்தானா என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விசாரணை மேற்கொண்டதில் ஸ்கிராப் தொழில் போட்டி காரணமாகவும் ஏற்கனவே இந்த தொழில் போட்டியின் மூலம் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் பிபிஜி குமரனை கொலை செய்த விவகாரத்தில் பழி வாங்குவதற்காக வெங்கடேசன் என்பவன் கொலை செய்யப்பட்டார்.

வெங்கடேசனின் ஏழாவது ஆண்டு நினைவு நாள், இரு தினங்களுக்கு முன்பு அனுசரிக்கப்படும்போது கொலை செய்த பிபிஜி சங்கரை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்ய வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டதாகவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இரு கும்பலைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து கொலை செய்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்துவதாகவும், சரணடைந்தவர்களை காவலில் எடுத்து விசாரித்தாலே முழு விவரங்கள் தெரியவரும் எனப் போலீசார் தெரிவிக்கின்றனர்.

சரணடைந்த 9 நபர்களையும் வருகின்ற 5ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக பிபிஜி சங்கர் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது பாஜக நிர்வாகி தடா பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என கோஷமிட்டு அரசியல் ரீதியாக நடைபெற்ற கொலை என போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் மற்றும் சரணடைந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தொழில் போட்டி காரணமாகவே கொலை நடந்தது தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீஸார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மீதமுள்ள கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பல தனியார் நட்சத்திர ஹோட்டல்கள் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details