பொறியியல் பட்டப் படிப்பான பி.ஆர்க்கில் சேர்வதற்கு இன்று முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்பு பிரிவினரான மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 3 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 22 பேர், விளையாட்டு வீரர்கள் 45 பேர் என மொத்தம் 70 பேர் கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கல்லூரியில் உள்ள காலியிடங்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய உள்ளனர். தற்போது வரை விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் நீடித்து வருகிறது. விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் பங்கேற்ற விளையாட்டிற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
ஆனால் பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு இந்த ஆண்டு 75 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சுமார் 50 மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களுடன் நேரில் வருகை தந்துள்ளனர்.
விளையாட்டு பிரிவில் இடங்களை தேர்வு செய்ய வந்துள்ள மாணவர்களின் சான்றிதழ்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கினால் மட்டுமே தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியும் என்ற நிலையில், இதுவரை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால் அங்கு வந்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வு குறித்த முறையான தகவல்களை வெளியிடாததால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.