சென்னை: கங்கா தெருவைச் சேர்ந்தவர் உத்தமராஜ் , ஓய்வு பெற்ற ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். கடந்த ஆண்டு இவருக்கும் ஆவடி டேங்க் பேக்டரியில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் ரமேஷ்பாபு என்பவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, ரமேஷ்பாபு ஆவடி டேங்க் பேக்டரி, தென்னக ரயில்வே துறையில் உயர் அலுவலர்களைத் தனக்கு தெரியும் என்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக உத்தமராஜிடம் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய உத்தமராஜ் உறவினர்கள், நண்பர்கள் உள்பட எட்டு பேரிடம் ரூ. 15 லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப் பணத்தை வாங்கி ரமேஷ்பாபுவிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஒரு வருடத்திற்கு மேலாகியும் பணம் கொடுத்தவர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இது பற்றி கேட்ட உத்தமராஜிக்கு, ரமேஷ்பாபு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து உத்தமராஜ் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.