தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 1, 2021, 5:23 PM IST

ETV Bharat / state

அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 1) நடைபெற்றது.

இந்த ஆலோசனையில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்த செயற்குழுக் கூட்டத்தில், அதிமுகவின் தற்காலிக சபாநாயகராக, தமிழ் மகன் ஹுசேன் நியமிக்கப்பட்டார். அதிமுக செயற்குழுவில் 11 தீர்மானங்களும் 2 சிறப்புத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

நடந்து முடிந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் பல்வேறு போலியான வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு அளித்து ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கும் திமுகவின் நேர்மையற்ற பரப்புரைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மழை வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டு மக்கள் துயர் துடைக்க அதிமுக அரசு விரைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் தேர்வு செய்யப்படுவர் என்ற விதிகளை மாற்றி சிறப்புத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் போராட்டம்

மேலும், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் குறித்து திமுக வெளியிடாவிட்டால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வரும் தேர்தல்களில் வெற்றி

செயற்குழு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் சிறப்பான முறையில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

11 தீர்மானங்களும், அதுபோன்று சிறப்புத் தீர்மானங்களும், செயற்குழு உறுப்பினர்களின் கர ஒலியோடு ஒருமித்த கருத்தோடு நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தில் இந்த ஆட்சியின் அவலநிலை, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலைகளை எல்லாம் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சி போன்ற தேர்தல்களிலே அதிமுக மகத்தான வெற்றியைப் பெறுவதற்கு, ஒன்றுபட்டு நாம் உழைக்கவேண்டும். பொன்விழாவை பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடும் வகையிலே அதிமுக தோழர்கள் தயாராக வேண்டும்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு

அன்வர் ராஜாவை நீக்கியது சரி

தற்காலிகமாக அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அன்வர் ராஜாவை பொறுத்தவரை அதிமுக கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும், முரண்பாடான வகையில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கப்பட்டுள்ளார்.

அவரை நீக்கியது சரியானது. இதுபோன்ற நடவடிக்கையை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவில்லை என்றால், ஆள் ஆளுக்கு விமர்சனம் செய்துகொண்டிருப்பார்கள். இந்த இயக்கம் கட்டுப்பாடு மிக்க இயக்கம்" என்றார்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து நீக்கம்

ABOUT THE AUTHOR

...view details