தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 9, 2021, 8:24 AM IST

ETV Bharat / state

கோஷ்டி மோதலை திசை திருப்ப வீண் பழி சுமத்த வேண்டாம் : அமமுக புகார்

அதிமுகவில் நிலவும் கோஷ்டி மோதலை திசை திருப்ப அமமுக மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

கோஷ்டி மோதலை திசை திருப்ப வீண் பழி சுமத்த வேண்டாம் : அமமுக புகார்
கோஷ்டி மோதலை திசை திருப்ப வீண் பழி சுமத்த வேண்டாம் : அமமுக புகார்

சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் டிசம்பர் 5 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டதையொட்டி கடற்கரை சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அங்கு அஞ்சலி செலுத்த வந்த எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசப்பட்டது. அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தூண்டுதலின் பேரில் அ.ம.மு.க-வினர் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டி அ.தி.மு.கவை சேர்ந்த மாறன் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணா சதுக்கம் காவல் துறை அ.ம.மு.க-வினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

திசை திருப்ப வேண்டாம்

இந்நிலையில் உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கோஷ்டி மோதலை திசை திருப்ப அ.ம.மு.க-வினர் மீது வீண்பழி சுமத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.ம.மு.க வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வேலு கார்த்திகேயன் புகார் மனு அளித்தார்.

அமமுக புகார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த சில நாட்களாக அ.தி.மு.க கட்சிக்குள்ளே பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக கோஷ்டி மோதல்கள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே எனவும், அதுபோலவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திலும் ஏற்பட்ட உட்கட்சி கோஷ்டி மோதலைத் திசைதிருப்ப அ.ம.மு.க-வினர் மீது தாக்குதல் நடத்தியதாக வீண்பழி சுமத்தப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார் .

அமமுகவுக்கு தொடர்பு இல்லை

மேலும், அன்றைய தினம் அஞ்சலி செலுத்திய பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உட்பட அ.ம.மு.க-வினர் அனைவரும் கலைந்து சென்று விட்டதாகவும், நடந்த தாக்குதல் சம்பவத்தில் அ.ம.மு.க-வினர் தலையீடு இல்லை எனவும் தெரிவித்த அவர், அங்கு எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை காவல்துறை முறையாக ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்திச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க:ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: களநிலவரம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details