தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 7, 2019, 6:15 PM IST

Updated : Nov 7, 2019, 6:51 PM IST

ETV Bharat / state

'சீர்மிகு பல்கலை.அந்தஸ்து - அண்ணா பல்கலை. ஒப்புக்கொள்ளாவிடில் வேறு பல்கலைக்கழகத்துக்கு தரப்படும்'

சென்னை: மத்திய அரசின் உயர்கல்வி தகுதியைப் பெறுவதற்கான கடிதத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புதல் அளிக்காவிட்டால், வேறு பல்கலைக் கழகத்திற்குத் தர வாய்ப்புள்ளதாக சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் என். கோபால சுவாமி தெரிவித்துள்ளார்.

சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் என். கோபால சுவாமி

சென்னையில்சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் என். கோபால சுவாமி ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு சிறப்புப் பேட்டியளித்திருக்கிறார். அதில்அவர் கூறியதாவது, 'பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வெளிநாட்டுப் பேராசிரியர்கள் நியமனம், வெளிநாட்டு மாணவர் சேர்க்கை, புதிய பாடத்திட்டம் போன்ற அனைத்திற்கும் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அனுமதி பெற வேண்டும். இதைத் தவிர்க்கும் வகையிலும், நமது மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களை உலக அளவில் தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக சர்வதேச அளவில் 500-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவில் அதிக அளவில் பல்கலைக்கழங்கள் இருந்தாலும், சர்வதேச அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே இந்தியாவில் 20 பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தினை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து பெரும் பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படத் தேவையில்லை.
ஆனால், சீர்மிகு பல்கலைக்கழகத்தின் அதிகாரமளித்தல் குழுவின் ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட முடியும்.

சீர்மிகு பல்கலைக்கழக அதிகாரமளித்தல் குழுவின் தலைவர் என். கோபால சுவாமி பேட்டி
இந்த பல்கலைக்கழங்களில் 25 விழுக்காடு வெளிநாட்டுப் பேராசிரியர்களை நியமித்து அவர்களுக்கான சம்பளத்தையும் பல்கலைக்கழகமே நிர்ணயம் செய்யலாம். அதேபோல் 25 விழுக்காடு வெளிநாட்டு மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களுக்கான கட்டணத்தை பல்கலைக் கழகங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

இதில் முக்கியமாக வரைமுறையில் சிலவற்றை எளிதாக்கி உள்ளோம். 10 ஆண்டிற்குள் உலக தரவரிசைப் பட்டியலில் 500 இடங்களுக்குள் வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக தேர்வாகும் பல்கலைக்கழகளுக்கு சில சுதந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியாவில் 10 அரசு மற்றும் 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து அளிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 30 பல்கலைக்கழகங்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளன. இதில் 20 பல்கலைக்கழகங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை ஐஐடி, வேலூர் விஐடி பல்கலைக்கழகம் ஆகியவை சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தை பெற்றுள்ளன. தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான ஒப்புதல் கடிதத்தை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கவில்லை. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் கடிதத்தை அளிக்காவிட்டால், பட்டியலில் அடுத்துள்ள பல்கலைக் கழகத்தை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சீர்மிகு பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்ற பின்னர், சம்மந்தப்பட்ட பல்கலைக்கழங்கள் அதிகளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். அதனடிப்படையில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழங்கள் உலகத்தர வரிசையில் இடம் பெற முடியும். இந்த ஆராய்ச்சிகள் சமுதாயத்திற்குப் பயனுள்ள வகையிலும், மற்றவர்கள் பின்பற்றும் வகையிலும் அமைய வேண்டும்.

இந்த சீர்மிகு பல்கலைக்கழகத்தில் சேரும் எந்த ஒரு மாணவரும் கட்டணம் செலுத்த முடியவில்லை என்ற காரணத்திற்காக படிப்பைப் பாதியில் நிறுத்தக் கூடாது. எனவே அவர்களுக்குத் தேவையான கல்வி உதவித் தொகையைப் பல்கலைக்கழகம் வழங்க வேண்டும். சீர்மிகு அந்தஸ்து பெற்ற பிறகு மத்திய அரசு அளிக்கும் 200 கோடி ரூபாய் நிதியில் உட்கட்டமைப்பு வசதிகளை பல்கலைக்கழகம் மேம்படுத்திக் கொள்ளலாம்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தொடர் கதையாகிவரும் அண்ணா பல்கலை. வினாத்தாள் கசிவு விவகாரம்!

Last Updated : Nov 7, 2019, 6:51 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details