கரோனா வைரசின் (தீநுண்மி) அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும் (ஐஓசி), டோக்கியோ 2020 அமைப்புக் குழுவும் இணைந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அதிதீவிரமாகச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தீபம் மார்ச் 25ஆம் தேதி ஏற்றப்படவுள்ளது. மேலும் இந்த ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டமானது ஜப்பானில் உள்ள 47 மாகாணங்களுக்குச் செல்லவுள்ளது.
‘ஒலிம்பிக் தீபத் தொடர் ஓட்டத்தை விட பாதுகாப்பு முக்கியம்’ இது குறித்து பேசிய டோக்கியோ 2020 அமைப்புக் குழுத் தலைவர் சீகோ ஹாஷ்மோடோ, “ஒலிம்பிக் தீப ஓட்டத்தின்போது கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை நாங்கள் உருவாக்குவோம்.
அதில் சுகாதாரக் கண்காணிப்பு, ஊழியர்களின் ஆரோக்கியம், சாலையில் பார்வையாளர்களின் கூட்டத்தைத் தவிர்ப்பது போன்றவைகளைக் கண்காணிக்கவுள்ளோம். ஏனெனில் இந்த ஒலிம்பிக் தீப ஓட்டத்தைவிட பாதுகாப்பு என்பது மிக முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: பந்து வீச்சிலும் அசத்தும் ரூட்; 145 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்