மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட் போட்டி, தலா 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்த நிலையில், டெஸ்ட் போட்டி முடிவடந்த நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தான் முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்கிஸ் முடிவில் அந்த அணியால் 219 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் தஹ்லியா மெக்ராத் மட்டுமே அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. இந்திய அணியின் சார்பில் பூஜா வஸ்த்ரகர் 4 விக்கெட்களும், சினே ராணா 3 விக்கெட்களும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 406 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சா கோஷ், ரோட்ரிக்ஸ், மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் அரைசதத்தை கடந்தனர். இதனால் இந்திய அணி 187 ரன்கள் முன்னிலை வகித்தது.