டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யப்படுத்தும் வகையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் ஒன்பது இடத்தில் இருக்கும் அணிகள், தலா ஆறு டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளன. இரண்டு வருடங்களாக நடைபெறும் இந்தத் தொடரில் புள்ளிகள் அடிப்படையில் முதலிரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20, ஒருநாள் தொடரை இந்திய அணி வென்ற நிலையில், தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஆன்டிகுவாவில் இன்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் ஃபீல்டிங் செய்ய தீர்மானித்தார்.
இந்திய அணியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின், ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோர் ஓரம் கட்டப்பட்டனர். அதேசமயத்தில், மயங்க் அகர்வால், கே.எல். ராகுல் ஆகியோர்தான் இந்தத் தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்குவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமராஹ் ப்ரூக்ஸ் இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார்.