தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இரட்டை சதங்களின் நாயகன் ஹிட்மேன்!

கடந்த 2017ஆம் ஆண்டு டிச.13ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்து இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது.

By

Published : Dec 13, 2020, 3:58 PM IST

This Day That Year: Rohit Sharma smashed his 3rd double ton
This Day That Year: Rohit Sharma smashed his 3rd double ton

கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும், ஒருநாள் போட்டிகளில் சதமடிப்பதையும், டி20 போட்டிகளில் அரைசதம் கடப்பதையும் தங்களது சாதனை பட்டியலில் பெருமையாக கருதுவர்.

சச்சின் டெண்டுல்கர்

ஆனால் இவர்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரட்டை சதத்தைப் பதிவு செய்து அசத்திய முதல் வீரர் ’மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கர். அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன வீரேந்திர சேவாக் 219 ரன்களை குவித்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துக்கொண்டார்.

வீரேந்திர சேவாக்

அவர்களைத் தொடந்து இந்தப் பட்டியலில் இடம் பிடித்தவரும் இந்தியர்தான். தற்போதுள்ள இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் ரோஹித் சர்மா, மற்றவர்களால் நெருங்க முடியா சாதனையை ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை நிகழ்த்தி காட்டினார்.

வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல்

கடந்த 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பெங்களூருவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தனது முதல் ஒருநாள் இரட்டை சதத்தை பதிவுசெய்து சாதனைப் படைத்தார். மேலும் தனிநபராக ஆஸ்திரேலிய அணிக்கெதிராக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் அவரையே சேரும்.

நியூசிலாந்தின் மார்டின் கப்தில்

அதன்பின் 2014ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், ரோஹித் ஆடிய ருத்ரதாண்டவத்திற்கு பிறகு அவரை, உலகெங்கும் உள்ள் கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாகவும் அந்நிகழ்வு மாற்றியது. அப்போட்டியில் இதுவரை யாரும் செய்ய நினைத்திடாத ஒரு சாதனையையும் நிகழ்த்தி காட்டினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதமடித்த ஹிட்மேன்

அது சர்வதேச ஒருநாள் போட்டியில் 264 ரன்களை குவித்ததுதான். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அடிக்கப்பட்ட தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும், இதுவரை யாராலும் முறியடிக்க முடியாத சாதனையாகவும் இருக்கிறது.

அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல், நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

இலங்கை அணிக்கெதிராக இரட்டை சதம் விளாசிய ரோஹித் சர்மா

ஆனால் தனது அதிரடி ஆட்டத்திற்கு ஓய்வு கொடுக்க எண்ணாத ரோஹித், கடந்த 2017ஆம் ஆண்டு இதே நாளில் மொஹாலியில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில், மீண்டும் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார்.

அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. அதைத்தொடர்ந்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் - தவான் இணை முதல் விக்கெட்டிற்கு 115 ரன்களை சேர்த்தது. அதனையடுத்து ரோஹித்துடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் தனது பங்கிற்கு பவுண்டரிகளை விளாசினார்.

ஆனால் மறுமுனையில் இருந்த ரோஹித் சர்மா, எதிரணியின் பந்துவீச்சாளர்கள் வீசும் பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் மாற்றி அசத்தினார். மீண்டும் இலங்கை பந்துவீச்சாளர்களின் மனதில், கொல்கத்தா ஒருநாள் போட்டியை கண்முன் நிறுத்தினார்.

இலங்கை அணிக்கெதிராக இரண்டாவது முறை இரட்டைசதமடித்த ரோஹித் சர்மா

போட்டியின் 40 ஓவர்வரை 101 ரன்களை மட்டுமே எடுத்திருந்த ரோஹித் சர்மா, அடுத்த பத்து ஓவர்களில் 107 ரன்களை விளாசி அசத்தினார். அதனோடு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது மூன்றாவது இரட்டை சதத்தையும் பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும் இலங்கை அணிக்கெதிராக ரோஹித் சர்மா பதிவு செய்த இரண்டாவது இரட்டை சதமாகவும் அது அமைந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதமடிப்பதையே ஒவ்வொரு வீரரும் எட்டா கனி என்று நினைக்கும் தருணத்தில், மூன்று முறை அக்கனியை பறித்து, சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியவர் ‘ஹிட்மேன்’ ரோஹித் சர்மா ஒருவரே.

இதனால் ரோஹித் சர்மா என்றாலே பல நாடுகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும், அணியினரும் சற்று பயத்துடனே இருக்கிறார்கள். இதன் காரணமாகவே சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட பத்து ஆண்டுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுகான பரிந்துரை பட்டியலில் ரோஹித்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க:ஐஎஸ்எல்: அங்குலோ கோலால் ஒடிசாவை வீழ்த்தியது கோவா!

ABOUT THE AUTHOR

...view details