குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக, தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டம், கடந்த மூன்று நாள்களாக வன்முறையாக மாறியுள்ளது. இந்தக் கலவரத்தில் காவல்துறை அலுவலர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக, பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், டெல்லியில் நடைபெறும் வன்முறை சம்பவத்திற்கு விரைவில் சுமுக தீர்வுகிடைக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங், "டெல்லியில் நடைபெறும் கலவரம் என்னை மிகவும் பாதிப்படைச் செய்தது.
தயவு செய்து அனைவரும் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த வன்முறையைத் தடுக்க அரசாங்கம் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கும். இறுதியில் நாம் அனைவரும் மனிதர்கள்தான். ஜாதி, மத பேதமின்றி ஒருவருக்கு ஒருவர் அன்பும், மரியாதையுயம் செலுத்த வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த வன்முறை தொடர்பாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்டார். வன்முறை ஏற்பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், டெல்லி வன்முறை கட்டுக்குள் வந்துள்ளதாகக் கூறயிருந்தது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க:டெல்லி வன்முறை - மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்