ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாக அதிரடி முடிவுகளை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு குழப்பம் கலந்த மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.
ஆம், 20 வயதே ஆன இளம் அதிரடி வீரரான ரஷித் கானை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் இன்று மாலை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கானை நீக்கிவிட்டு, குலாப்துன் நயீப் நியமிக்கப்பட்டார். புதிய கேப்டனுடன் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளிலும் தோல்வியை பெற்று தொடரிலிருந்து வெளியேறியது. அதே போன்று உலகக்கோப்பை தொடரின்போது, அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகம்மது ஷாஷாத் காயம் காரணமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வீரர் தனக்கு காயம் ஏற்படவில்லை தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டை வைத்தார்.