தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 11:53 AM IST

ETV Bharat / sports

இலங்கை அணிக்கு எதிராக 11 ஆண்டுகளாக தொடரும் இந்திய அணியின் ஆதிக்கம்!

புனேவில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

India thrash Sri Lanka by 78 runs in 3rd T20I, clinch series
India thrash Sri Lanka by 78 runs in 3rd T20I, clinch series

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மலிங்கா தலைமையிலான இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில், கவுகாத்தியில் நடைபெறயிருந்த முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், இத்தொடரின் கடைசி போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இந்தியா அணி இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை வெல்லுமா அல்லது இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. ரிஷப் பந்த், சிவம் தூபே ஆகியோருக்கு பதிலாக சஞ்சு சாம்சன், சாஹல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களான கே.எல். ராகுல், ஷிகர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்த நிலையில், ஷிகர் தவான் 52 பந்துகளில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த சஞ்சு சாம்சன் ஆறு ரன்களில் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

கே.எல். ராகுல் - ஷிகர் தவான்

மறுமுனையில், சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 54 ரன்களிலும் அவுட்டாக அவரையடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் நான்கு ரன்களில் நடையைக் கட்டினார். இதனால், இந்திய அணி 12.5 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை எடுத்திருந்து.

இறுதியில், மணிஷ் பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரது அதிரடியில் இந்திய அணி 20 ஓவர்களில் 201 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. மனிஷ் பாண்டே 18 பந்துகளில் நான்கு பவுண்டரி உட்பட 31 ரன்களிலும், ஷர்துல் தாகூர் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி, இரண்டு சிக்சர் உட்பட 22 ரன்களிலும் ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.

இதனிடையே, இப்போட்டியில் ஆறாவது வரிசையில் களமிறங்கிய விராட் கோலி 26 ரன்களில் ரன் அவுட்டானார். இலங்கை அணி தரப்பில் லக்ஷ்ன் சண்டகன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து, 202 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 15.5 ஓவர்களிலேயே 123 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் இந்திய அணி இப்போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இலங்கை அணியில் அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 57 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி மூன்று, ஷர்துல் தாகூர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஷர்தல்தாகூர்

இப்போட்டியில் பேட்டிங்கில் 22 ரன்களும், பவுலிங்கில் இரண்டு விக்கெட்டுகளும் எடுத்த ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்தத் தொடரில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி தொடர்நாயகன் விருதை வென்றார்.

நவ்தீப் சைனி

இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. இதுமட்டுமின்றி, இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி கடைசி 11 ஆண்டுகளில் விளையாடிய 19 தொடர்களில் ஒரு தொடரில் கூட தோல்வி அடையாமல் உள்ளது. 17 தொடர்களில் வெற்றியும் இரண்டு தொடரை சமனும் செய்தும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது.

ABOUT THE AUTHOR

...view details