2019 செப்டம்பர் 19ஆம் தேதி உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை பி.வி. சிந்து கைப்பற்றிய சில நிமிடங்களில் இந்தியாவின் பிரதமர் முதல் ஒட்டுமொத்த பொதுமக்களும் வாழ்த்து மழையைப் பொழியத் தொடங்கினர். சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இந்தியாவுக்குத் திரும்பியது முதல் பி.வி. சிந்து 53 நேர்காணல்களில் கலந்துகொண்டார். ஒவ்வொரு நேர்காணலும் 10 நிமிடங்கள். கிட்டத்தட்ட 530 கேள்விகளுக்கு பதில் சொல்லியாகிவிட்டது. ஆனால் இவரது குரலைக் கேட்பதற்கு ஊடகமும் பொதுமக்களும் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக பேட்மிண்டன் வீராங்கனை கொண்டாடப்பட்ட அரிதான நிமிடங்கள் அவை. ஆனால் அந்த நிமிடங்களுக்காக பி.வி. சிந்து எட்டு வயது முதல் போராடத் தொடங்கினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 1995 ஜூலை 5ஆம் ஆண்டு பி.வி. ராமன் - பி. விஜயா இணையருக்குப் பிறந்தவர் புசர்லா வெங்கட் சிந்து. பெற்றோர் இருவருமே சர்வதேச கைப்பந்தாட்ட வீரர்கள் என்பதால் விளையாட்டு மீதான ஆர்வம் பி.வி. சிந்துவுக்கு சிறுவயதிலேயே தொற்றிக்கொண்டது. அதிலும் அவரின் தந்தை ராமன் விளையாட்டின் உயரிய விருதான அர்ஜுனா விருது வாங்கியவர்.
இதனால் பி.வி. சிந்துவும் கைப்பந்தைத்தான் தேர்வுசெய்வார் என பெற்றோர் நினைக்க, அவரோ முன்னாள் பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்தின் ஆட்டத்தைப் பார்த்து பேட்மிண்டன் ராக்கெட்டை தனது ஆயுதமாகத் தேர்ந்தெடுத்தார். அதுவும் எட்டே வயதில்!
இதையும் படிங்க:டெஸ்ட் கிரிக்கெட்டின் பிகாசோ! #RAHULDRAVID
சிந்துவின் ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் மெஹ்பூபா அலியிடம் பயிற்சிக்காக அனுப்புகிறார்கள். அவரிடம் அடிப்படைகளைச் சரியாகக் கற்ற சிந்து, யாரைப் பார்த்து ராக்கெட்டை கையில் எடுத்தாரோ அவரிடமே பயிற்சிக்காக அனுப்பப்படுகிறார். ஆம், சிறுவயது முதலே கோபிசந்த் அகாதமியில் எதிர்காலத்திற்காகப் பட்டைத் தீட்டப்பட்டவர் பி.வி. சிந்து. அங்கு தொடங்கிய சிந்துவின் பேட்மிண்டன் பயணம் எங்குமே நிற்கவில்லை.
2012ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் சாய்னா நேவால் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அதனால் மீண்டும் 2016ஆம் பேட்மிண்டனில் நிச்சயம் பதக்கம் வந்துவிடும் என இந்தியர்கள் நம்பியபோது, யாரும் எதிர்பாராதவிதமாக சாய்னா நேவால் உக்ரேனிய வீராங்கனையிடம் தோல்வியடைந்து வெளியேறினார். இந்தியாவின் பேட்மிண்டன் பதக்கக் கனவு தகர்ந்துபோனதாகவே அனைவரும் நினைத்தனர். ஆனால் 20 வயதே நிறைந்த சிந்து இறுதிப் போட்டிக்குச் சென்று நூலிழையில் தங்கத்தைப் பறிகொடுத்தார்.